சத்தியமங்கலம் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம்? நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணி


சத்தியமங்கலம் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம்? நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணி
x
தினத்தந்தி 15 Nov 2018 11:00 PM GMT (Updated: 15 Nov 2018 9:11 PM GMT)

சத்தியமங்கலம் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதா? என்பதை கண்டறிய நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

டி.என்.பாளையம்,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தாளவாடி, கடம்பூர், கேர்மாளம் ஆகிய வனப்பகுதிகள் தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்து உள்ளது. இந்த நிலையில் எல்லை பகுதியில் உள்ள மலைக்கிராமங்களுக்கு புதிய நபர்கள் வந்து செல்வதாகவும், அவர்கள் கிராம மக்களிடம் அரசுக்கு எதிரான பொய் பிரசாரங்கள் பரப்பி வருவதாகவும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் மலைப்பகுதிக்கு உள்பட்ட கடம்பூர், மாக்கம்பாளையம், கோம்பைத்தொட்டி, குன்றி, கம்பனூர் ஆகிய பகுதிகளில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தற்போது பனி மூட்டம் நிலவி வருவதால் வனப்பகுதியில் போலீசார் முகாமிட்டு ரோந்து பணியில் ஈடுபடுகிறார்கள்.

விசாரணை

அவ்வாறு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் வனப்பகுதியில் ஆடு, மாடுகள் மேய்ப்பவர்களிடம் புதிய நபர்கள் யாரும் வனப்பகுதிக்குள் நடமாடுகிறார்களா? என விசாரித்தனர்.

மேலும் மலைக்கிராம மக்களை மூளை சலவை செய்து புதிய அமைப்பை உருவாக்கும் முயற்சிகள் எதுவும் மாவோயிஸ்டுகளால் நடைபெறுகிறதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story