நிலத்தகராறில் கழுத்தை அறுத்து விவசாயி கொலை: அண்ணன் மகன் கைது


நிலத்தகராறில் கழுத்தை அறுத்து விவசாயி கொலை: அண்ணன் மகன் கைது
x
தினத்தந்தி 15 Nov 2018 10:15 PM GMT (Updated: 15 Nov 2018 9:47 PM GMT)

மதுக்கூர் அருகே நில தகராறில் கழுத்தை அறுத்து விவசாயி கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவருடைய அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர்.

மதுக்கூர்,

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள வேப்பங்குளம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது80). விவசாயி. இவர் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு ஜெயராமன் தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் மதுக்கூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் மதுக்கூர் போலீசார் அங்கு சென்று ஜெயராமனின் உடலை கைப்பற்றி, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஜெயராமனுக்கும் அவருடைய அண்ணன் மகன் தமிழரசன் (48) என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்ததும், இதன் காரணமாக நடந்த தகராறில் ஆத்திரம் அடைந்த தமிழரசன் ஜெயராமனை கழுத்தை அறுத்து கொலை செய்து, வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தமிழரசனை கைது செய்தனர். 

Next Story