ஏற்காட்டில் பலத்த மழை: 5 இடங்களில் மரங்கள் விழுந்தன; மின் கம்பங்கள் சேதம்


ஏற்காட்டில் பலத்த மழை: 5 இடங்களில் மரங்கள் விழுந்தன; மின் கம்பங்கள் சேதம்
x
தினத்தந்தி 16 Nov 2018 10:51 PM GMT (Updated: 16 Nov 2018 10:51 PM GMT)

ஏற்காட்டில் பலத்த மழை பெய்ததால் 5 இடங்களில் மரங்கள் விழுந்தன. மேலும் மின் கம்பங்கள் சேதம் அடைந்ததால், மின் தடை ஏற்பட்டது.

ஏற்காடு,

‘கஜா‘ புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக ஏற்காட்டில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழை நேற்று பகலிலும் நீடித்தது. பகலில் ஒரு சில நேரங்களில் பலத்த மழையும், சாரல் மழையும் என மாறி, மாறி பெய்து கொண்டிருந்தது.

மழையின் காரணமாக ஏற்காடு கால்நடை ஆஸ்பத்திரி அருகே, தாவரவியல் பூங்கா அருகே, நஞ்சக்குட்டை, வெள்ளக்கரை, ஏற்காடு-குப்பனூர் சாலை ஆகிய 5 இடங்களில் மரங்கள் விழுந்தன. மேலும் சாலையோரம் இருந்த மின் கம்பிகளை அறுத்துக்கொண்டு மரங்கள் சாய்ந்ததால் மின் தடை ஏற்பட்டது. இதுமட்டுமின்றி ரோட்டின் குறுக்கே விழுந்த மரங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பொக்லைன் எந்திரங்கள் மூலமும் ரோட்டில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன. 30 நிமிடத்தில் மரங்கள் அகற்றப்பட்டு, சாலைகளில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

மேலும் மரங்கள் விழுந்ததில் கால்நடை ஆஸ்பத்திரி, தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களில் 2 மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. இவற்றை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். மின் தடை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்காட்டில் நேற்று பகலில் மழை பெய்து கொண்டிருந்ததால், சுற்றுலா பயணிகளின் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. இதனால் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், படகு இல்லம் உள்பட சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. கடுங்குளிர் நிலவியதால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் ஏற்காடு- சேலம் மலைப்பாதையில் கடும் மேக மூட்டமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை இயக்கினார்கள்.

இதே போல மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்று பலத்த மழை பெய்தது. தலைவாசல் பகுதியில் அதிகாலை முதல் மழை பெய்து கொண்டே இருந்தது. சூறாவளி காற்று வீசியதால் மரங்கள் சாய்ந்தன. ஊனத்தூர், புத்தூர், வரகூர், சிறுவாச்சூர், காட்டுக்கோட்டை, மணிவிழுந்தான், வேப்பநத்தம், நாவக்குறிச்சி ஆகிய இடங்களில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக பருத்தி சாகுபடி தோட்டங்களில் அதிகளவில் தண்ணீர் சூழ்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

புத்தூரில் மரவள்ளி கிழங்கு செடிகள் காற்றில் சாய்ந்தன. மேலும் ஊனத்தூரில் 2 மரங்கள் சாய்ந்தன. தென்னை மரம் ஒன்று அங்குள்ள குடிசை மீது விழுந்தது. இதில் குடிசை சேதம் அடைந்தது. மரம் விழும் போது அங்கு யாரும் இல்லாததால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

இதே போல மேட்டூர், ஆத்தூரில் நேற்று காலை முதல் மழை விட்டு, விட்டு பெய்து கொண்டிருந்தது. இளம்பிள்ளை, மகுடஞ்சாவடி, சங்ககிரி, தாரமங்கலம், எடப்பாடி, கொங்கணாபுரம், மேச்சேரி, ஓமலூர், தேவூர், ஆட்டையாம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் தூரல் மழை பெய்தது.


Next Story