ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட பள்ளி மாணவி மீட்பு : 2 பேர் கைது


ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட பள்ளி மாணவி மீட்பு : 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Nov 2018 11:51 PM GMT (Updated: 16 Nov 2018 11:51 PM GMT)

பிம்பிரியில் ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட பள்ளி மாணவி 12 மணி நேரத்தில் மீட்கப்பட்டாள். அவளை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புனே, 

புனே பிம்பிரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி குவின்ஸ் சொசைட்டி என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மாணவி மாகி ஜெயின் (வயது12). 6-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவளின் தந்தை ஐ.டி. நிறுவனத்திலும், தாய் வங்கியிலும் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் மாணவி மாகி ஜெயின் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தாள். பின்னர் கட்டிட காவலாளியிடம் பையை கொடுத்து விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றாள்.

அப்போது, அங்கு வந்த 2 பேர் மாணவியை குண்டு கட்டாக தூக்கி காரில் போட்டு கடத்தி சென்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடைக்காரர் மாணவியை காப்பாற்ற ஓடிவந்தார். ஆனால் கார் அங்கிருந்து வேகமாக சென்று விட்டது. உடனே அவர் இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டனர். இந்த நிலையில், இரவு 8 மணி அளவில் மாணவியின் தந்தையின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. இதில் பேசிய ஆசாமி, ‘உங்கள் மகளை நாங்கள் தான் கடத்தி வைத்து இருக்கிறோம். ரூ.50 லட்சம் தந்தால் அவளை உயிருடன் விட்டு விடுவோம்’ என்று கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் ரூ.15 லட்சம் தருவதாக தெரிவித்தார். பின்னர் அழைப்பு வந்த எண்ணை போலீசாரிடம் கூறினார்.

போலீஸ் விசாரணையில், அந்த அழைப்பு புனே ஹிஞ்வாடி பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து பேசியிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து அதிகாலை 4 மணி அளவில் போலீசார் அதிரடியாக அந்த கட்டிடத்துக்குள் புகுந்து அங்கு அடைத்து வைக்கப்பட்டு இருந்த மாணவியை மீட்டனர்.

மேலும் அவளை கடத்தி வைத்து இருந்த 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர்களது பெயர் நிதின் சத்யாவான் (25), ஜித்தேந்திரா பஞ்சாரா (21) என்பதும், விரைவில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு மாணவியை கடத்தியதும் தெரியவந்தது.

பணம் கேட்டு கடத்தப்பட்ட மாணவியை 12 மணி நேரத்தில் கண்டுபிடித்து பத்திரமாக மீட்ட போலீசாரை கமிஷனர் பத்மநாபன் பாராட்டினார்.

Next Story