தஞ்சை, நாகை, திருவாரூரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: டெல்டா பகுதியில் ‘கஜா’ புயல் ஏற்படுத்திய கோர தாண்டவம்


தஞ்சை, நாகை, திருவாரூரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: டெல்டா பகுதியில் ‘கஜா’ புயல் ஏற்படுத்திய கோர தாண்டவம்
x
தினத்தந்தி 16 Nov 2018 11:54 PM GMT (Updated: 16 Nov 2018 11:54 PM GMT)

டெல்டா பகுதியில் ‘கஜா’ புயலின் கோர தாண்டவம் காரணமாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

தஞ்சாவூர்,

டெல்டா பகுதியில் ‘கஜா’ புயலின் கோர தாண்டவம் காரணமாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. பலமணி நேரம் போக்குவரத்தும் துண்டிக்கப் பட்டன.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘கஜா’ என பெயரிடப்பட்டது. இந்த புயல் நாகை அருகே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டதால் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டது.

கஜா புயல் நேற்று முன்தினம் இரவு கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் புயல் நேற்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.

இந்த புயல் காரணமாக டெல்டா பகுதிகளில் 110 கி.மீ. வேகத்துக்கு காற்று வீசியது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 111 கி.மீ. வேகத்துக்கு காற்று வீசியது. இதையொட்டி பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழையும் கொட்டியது. கஜா புயலின் இந்த கோர தாண்டவத்தால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரங்கள் விழுந்ததில் மின்கம்பங்களும் சாய்ந்தன.

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை மரங்கள், சாலை ஓரங்களில் இருந்த மரங்களும் வேரோடு சாய்ந்தன. சாலைகளே தெரியாத அளவிற்கு மரங்கள் சாய்ந்து கிடந்தன. மின்கம்பிகளும் சாலைகளில் அறுந்து விழுந்து கிடந்தன.

காற்றுடன் மழை பெய்ததால் வீடுகளில் இருந்த மக்களும் அச்சத்துடனேயே இருந்தனர். வீடுகளின் மேல் போடப்பட்டு இருந்த கூரைகள் பெயர்ந்து விழுந்தன. மரக்கிளைகள் முறிந்து வீடுகள் மீதும் விழுந்தன. எங்கு பார்த்தாலும் முறிந்து விழுந்த மரக்கிளைகள், இலைகளாகவே காட்சி அளித்தன.

புயல் எச்சரிக்கையையொட்டி தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் மின்சாரம் நிறுத்தப்பட்டது. நேற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததையடுத்து 2-வது நாளாக டெல்டா மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் இருளில் மூழ்கின. மின்கம்பங்களை சரி செய்ய, அந்த மாவட்ட ஊழியர்கள் தவிர வெளி மாவட்டங்களில் இருந்தும் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மின் கம்பங்களை சரி செய்து மின்வினியோகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாநகரில் ஒரு சில இடங்களை தவிர மற்ற பகுதிகளுக்கு நேற்று இரவு மின்வினியோகம் செய்யப்பட்டது. இதே போல் புயல் பாதிக்காத பகுதிகளிலும் உடனடியாக மின் வினியோகம் செய்யப்பட்டது.

சாலைகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல பகுதிகளில் நேற்று முழுவதும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டன. மெயின் சாலைகளில் விழுந்த மரங்கள், மின்கம்பங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன. புயல் முன்னெச்சரிக்கை காரணமாக மாவட்ட நிர்வாகம், பொக்லின் எந்திரம், மரம் அறுக்கும் எந்திரங்களுடன் பணியாளர்களையும் தயார் நிலையில் வைத்திருந்தது.

இதையடுத்து மரங்கள் சாய்ந்து விழுந்த பகுதிகளுக்கு அவர்கள் உடனடியாக சென்று மரக்கிளைகளை அறுத்து அப்புறப்படுத்தினர். இருப்பினும் போக்குவரத்து பலமணி நேரம் துண்டிக்கப்பட்டது. இதனால் சில கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மரங்கள், மின்கம்பங்கள் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் போக்குவரத்து சீரானது. பல இடங்களில் மரங்கள் விழுந்ததில் வீடுகளின் சுவர் களும் இடிந்து விழுந்தன.

போலீசாரும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இது தவிர தன்னார்வலர்கள், பல்வேறு அமைப்புகள், கட்சிகளை சேர்ந்தவர்களும் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கடலோர பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகுகளும் சேதம் அடைந்தன.

கஜா புயல் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. மக்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்கள் புயல் பாதுகாப்பு மையங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகள் போன்றவற்றில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சமைத்து உணவும் வழங்கப்பட்டன.


Next Story