குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது


குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 20 Nov 2018 10:00 PM GMT (Updated: 20 Nov 2018 6:48 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் வழிப்பறி, சாராயம் விற்பனை, மணல் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

வேலூர், 

வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்தவர் காமராஜ் என்கிற மைக்கேல் (வயது 28), வேலூர் அரசமரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (34). இவர்கள் இருவரையும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாகாயம் போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்து வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர். மைக்கேல், பூபாலன் ஆகியோர் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

குடியாத்தத்தை சேர்ந்த ரகு என்கிற ரகுராமன் (46) என்பவரை சாராயம் விற்றதாக குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

அதேபோல் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலாஜா வி.மோட்டூர் பகுதியை சேர்ந்த ரஜினியை (34) போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

மைக்கேல், பூபாலன், ரகு, ரஜினி ஆகியோர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சிபிசக்ரவர்த்தி, கலெக்டர் ராமனுக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான ஆணையின் நகலை ஜெயிலில் இருக்கும் மைக்கேல், பூபாலன், ரகு, ரஜினி ஆகியோரிடம் போலீசார் வழங்கினர்.

Next Story