கொட்டும் மழையில் உணவுக்காக வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் நிவாரண முகாம்களில் மளிகை பொருட்கள் தட்டுப்பாடு


கொட்டும் மழையில் உணவுக்காக வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் நிவாரண முகாம்களில் மளிகை பொருட்கள் தட்டுப்பாடு
x
தினத்தந்தி 20 Nov 2018 11:00 PM GMT (Updated: 20 Nov 2018 7:14 PM GMT)

பட்டுக்கோட்டை பகுதியில் நேற்று கொட்டும் மழையில் பொதுமக்கள் உணவுக்காக வரிசையில் காத்திருந்தனர். நிவாரண முகாம்களில் மளிகை பொருட்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது ‘கஜா’. புயலில் வீடுகளை இழந்த பொதுமக்கள் நிவாரண முகாம்களில் நேற்று 5-வது நாளாக உணவுக்காகவும், குடிநீருக்காகவும் காத்திருந்தனர்.

பட்டுக்கோட்டை அருகே கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் புயல் நிவாரண முகாம் அமைக்கப்பட்டு, அங்கு பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு உணவு சமைத்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இங்கு நேற்று மதியம் மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் பொதுமக்கள் குடை பிடித்தபடி நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த நிலையில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டதால், வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

இதே நிலைமை தான் நேற்று பட்டுக்கோட்டை பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள நிவாரண முகாம்களிலும் நிலவியது. புயலை தொடர்ந்து பெய்த மழை நிவாரண முகாம்களில் சமையல் செய்யும் பணியை பாதித்தது.

நிவாரண முகாம்களில் கியாஸ் அடுப்பு இல்லாததால் விறகுகளை பயன்படுத்தியே சமையல் செய்து வருகிறார்கள். இந்த நேரத்தில் பெய்த மழை விறகுகளை நனைத்து விட்டது. போதிய அளவுக்கு உணவு வினியோகம் செய்ய வேண்டும் என நிவாரண முகாம்களில் வசிக்கும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சில முகாம்களில் அரிசி, எண்ணெய், மிளகாய் வற்றல், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. சமையல் செய்யவும் ஆட்கள் இல்லை. ஏற்கனவே புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தாங்களாகவே சமையல் செய்து வருகின்றனர்.

Next Story