குழித்துறை ஆற்றில் நர்சு பிணமாக கிடந்தார் எப்படி இறந்தார்? போலீஸ் விசாரணை


குழித்துறை ஆற்றில் நர்சு பிணமாக கிடந்தார் எப்படி இறந்தார்? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 21 Nov 2018 11:00 PM GMT (Updated: 21 Nov 2018 3:30 PM GMT)

குழித்துறை ஆற்றில் நர்சு பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

களியக்காவிளை,

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் பழைய பாலம் அருகே நேற்று காலை பொது மக்கள் குளிக்க சென்றனர். அப்போது அங்கு ஆற்றில் ஒரு இளம்பெண் பிணம் மிதந்து வந்தது. இதை பார்த்த பொது மக்கள் உடனே களியக்காவிளை போலீசுக்கும், குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து வந்தனர். அதே சமயம் குழித்துறை தீயணைப்பு படை வீரர்களும் அங்கு வந்து, ஆற்றில் மிதந்து வந்த இளம்பெண் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

அந்த பெண் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் பெயர் ஸ்ரீஜா (வயது 23), தந்தை பெயர் ஸ்ரீதரன், மூலச்சல் பாட்டத்துவிளையை சேர்ந்தவர் என்றும், தேங்காப்பட்டணத்தில் உள்ள பெரியப்பா வீட்டில் தங்கியிருந்து, நித்திரவிளையில் உள்ள மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வந்தார் என்பதும், மேலும் ஸ்ரீஜா உடல்நிலை சரியில்லாமல் மன வருத்தத்தில் இருந்து வந்ததும் தெரிய வந்தது. அவர் நேற்று முன்தினம் இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பாததால் உறவினர்கள், அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் அவர் ஆற்றில் பிணமாக மிதந்தது உறவினர்களுக்கு தெரிய வந்தது.

மேலும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story