அரியலூர் மாவட்டத்திற்கு நபார்டு வங்கி சார்பில் ரூ.2 ஆயிரத்து 641 கோடி கடன்


அரியலூர் மாவட்டத்திற்கு நபார்டு வங்கி சார்பில் ரூ.2 ஆயிரத்து 641 கோடி கடன்
x
தினத்தந்தி 28 Nov 2018 10:45 PM GMT (Updated: 28 Nov 2018 8:38 PM GMT)

அரியலூர் மாவட்டத்திற்கு நபார்டு வங்கி சார்பில் ரூ.2 ஆயிரத்து 641 கோடி கடன் வழங்கப்பட்டது. அதற்கான திட்ட அறிக்கையை கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து வங்கிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் நபார்டு வங்கி சார்பில் வளம் மற்றும் வங்கிக்கடனுக்கான திட்ட அறிக்கையை கலெக்டர் வெளியிட்டு பேசியதாவது:-

அரியலூர் மாவட்டத்திற்கு 2019-20-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் நபார்டு வங்கி திட்ட மதிப்பீடு ரூ.2 ஆயிரத்து 641 கோடி முன்னுரிமை வங்கிக் கடன்களாக வழங்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கிறது. மாவட்டத்தில் தற்போது உள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகள், விரிவாக்க சேவை மையங்களின் செயல்பாடு, பெருகிவரும் தொழில்நுட்ப பரிமாற்றம், வங்கிகளின் நிதி ஆதாரம் ஆகியவற்றை ஆதாரமாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் நபார்டு வங்கி கடன் திட்ட அறிக்கையை ஒரு புத்தகமாக வெளியிடுகிறது.

அந்த வகையில் அடுத்த ஆண்டு வேளாண்மை துறைக்கு ரூ.2 ஆயிரத்து 344 கோடி, சிறு,குறு தொழில்களுக்கு ரூ.58 கோடி, இதர முன்னுரிமை கடன்களுக்கு ரூ.239 கோடி என வாய்ப்புகள் இருப்பதாக அது விவரிக்கிறது. இந்த திட்ட அறிக்கை மாவட்டத்தின் வளமையை மட்டுமே முன் நிறுத்தி தயாரிக்கப்படுகிறது.

எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் இந்த திட்ட அறிக்கையை பின்புலமாக கொண்டு அடுத்த ஆண்டுக்கான அவர்களது கடன் திட்டங்களை தயாரிக்கும் மாவட்டத்தின் முன்னோடி வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அந்த திட்டங்களை ஒழுங்கு முறைபடுத்தி மாவட்ட கடன் திட்டமாக தயாரித்து பின்னர் வெளியிடப்படும். மேலும், சொட்டு நீர் பாசனம், தரிசு நில மேம்பாடு, பழப்பயிர் பண்ணைகள், மீன் வளர்ப்பு, ஊரக கிடங்குகள், கூட்டு பொறுப்புகள், குழுக்கள் அமைத்தல் போன்ற கடன் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் திட்ட இயக்குனர் (பொறுப்பு) (ஊரக வளர்ச்சி முகமை) லலிதா, மாவட்ட வளர்ச்சி மேலாளர் (நபார்டு வங்கி) நவீன்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளஞ்சேரன், அரியலூர் ரிசர்வ் வங்கி மேலாளர் பாலாஜி மற்றும் வங்கி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story