3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் உண்ணாவிரதம்


3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 30 Nov 2018 9:30 PM GMT (Updated: 30 Nov 2018 7:16 PM GMT)

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் உண்ணாவிரதம் ஜான் பாண்டியன் மனைவியுடன் பங்கேற்றார்.

சென்னை,

தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். பட்டியல் பிரிவில் உள்ள சாதிகளை தேவேந்திர குல வேளாளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். ‘வேளாண் மரபினர்’ என்ற தனிப்பிரிவை ஏற்படுத்தி மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு அந்த கழகத்தின் நிறுவனத் தலைவர் பெ.ஜான் பாண்டியன் தலைமை தாங்கினார். அவரது மனைவியும், கழகத்தின் பொதுச்செயலாளருமான ஜா.பிரிசில்லா முன்னிலை வகித்தார். சென்னை மண்டல செயலாளர் செ.ராஜேந்திர பிரசாத் வரவேற்று பேசினார்.

உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து ஜான் பாண்டியன் பேசும்போது, ‘தமிழகத்தில் பட்டியல் பிரிவில் உள்ள 7 சாதிகளையும் தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அறிவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும். எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையான தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவுநாளை அரசு விழாவாக தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.’ என்றார்.

ஜான் பாண்டியனுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். எனவே உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகளுடன் ஜான் பாண்டியனை வாழ்த்தியும் பேசினர்.

Next Story