திருப்பூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரதம்


திருப்பூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 7 Dec 2018 10:15 PM GMT (Updated: 7 Dec 2018 9:46 PM GMT)

திருப்பூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று காலை திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன்பு தொடங்கியது. உண்ணாவிரத போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சசிகுமார் முன்னிலை வகித்தார்.

கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் சுகாதார வளாகம், மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கணினி மற்றும் இணையதள வசதி செய்து தர வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கான அடிப்படை கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும். இந்த பதவியை தொழில்நுட்ப பதவியாக அறிவிக்க வேண்டும். ஒரே அரசாணை மூலமாக மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராமங்களுக்கு முழு கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும். இ-அடங் கலை கிராம நிர்வாக அலுவலர்கள் டிஜிட்டல் கையொப்பமிட்டு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

ஏற்கனவே இ-அடங்கல் பணி புறக்கணிப்பு, ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம், மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், இரவு நேர தர்ணா போராட்டம் என பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

போராட்டத்தை மேற்கு மண்டல செயலாளர் மாணிக்கவாசகம் தொடங்கி வைத்து பேசினார். மாநில செயலாளர் ஆறுமுகசாமி கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். திருப்பூர் மாவட்டம் முழுவதும் இருந்து சங்க உறுப்பினர்கள் திரளானவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் காளிமுத்து நன்றி கூறினார்.



Next Story