பூசாரி வீட்டில் திருடியதாக பிடிபட்டவர்: போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்ற கைதி தப்பி ஓட்டம்


பூசாரி வீட்டில் திருடியதாக பிடிபட்டவர்: போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்ற கைதி தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 8 Dec 2018 11:15 PM GMT (Updated: 8 Dec 2018 8:17 PM GMT)

பூசாரி வீட்டில் திருடியதாக பிடிபட்டு பொதுமக்களால் தாக்கப்பட்டவர், ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் அவர் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள சனவெளி பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர பாண்டியன் (வயது 58), குறிசொல்லும் பூசாரி. இவர் நேற்று முன்தினம் பகலில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பியபோது இவரது வீட்டிற்குள் தலைக்கவசம் அணிந்தபடி அரிவாளுடன் வாலிபர் ஒருவர் வெளியே வந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிவசங்கரபாண்டியன் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து வாலிபரை விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் விசாரணை செய்தபோது சென்னை வியாசர்பாடி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் சந்தோஷ்குமார்(28) என்று தெரியவந்தது. பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த சந்தோஷ்குமார் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையொட்டி ஆஸ்பத்திரியில் சப்–இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 13 பவுன் நகை, ரூ.1000 திருட்டு போனதாக பூசாரி சிவசங்கரபாண்டியன் போலீசில் புகார் செய்துள்ளார்.

இதேபோல வாலிபர் சந்தோஷ்குமாரும் போலீசில் புகார் அளித்திருந்தார். சென்னையில் இருந்து பஸ்சில் வந்து இறங்கி கண்மாய் பகுதியில் இருந்தபோது யாரையோ தேடிவந்த கும்பல் தன்னை தாக்கியதாக புகாரில் தெரிவித்துள்ளார். இந்த இரு புகார்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் வாலிபர் சந்தோஷ்குமார் நள்ளிரவில் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு ஆஸ்பத்திரியில் இருந்து நைசாக தப்பி ஓடிவிட்டார். நீண்டநேரமாகியும் திரும்பி வராததால் வாலிபரை தேடிபார்த்தபோது அவர் போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.

ஆஸ்பத்திரியின் வெளிப்பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சியின் அடிப்படையில் போலீசார் சந்தோஷ்குமாரை தேடிவருகின்றனர். போலீசார் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பி ஓடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story