தமிழகத்தில் ஏழை மக்களுக்கு 5 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு திட்டம் - அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்


தமிழகத்தில் ஏழை மக்களுக்கு 5 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு திட்டம் - அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்
x
தினத்தந்தி 8 Dec 2018 11:30 PM GMT (Updated: 8 Dec 2018 10:56 PM GMT)

தமிழகத்தில் ஏழை மக்களுக்கு 5 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

அனுப்பர்பாளையம்,

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் திட்டம் சார்பில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் விழா செட்டிபாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமார் முன்னிலை வகித்தார். ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் வரவேற்றார்.

இதில் தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய அம்மா இருசக்கர வாகனங்களை வழங்கி பேசியதாவது:-

ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்களை நிறைவேற்றியவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.அவருடைய வழியில் தற்போது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர். இதன்படி தமிழகம் முழுவதும் ஏழை மக்களுக்கு 5 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் 12 ஆயிரம் பேருக்கு விலையில்லா ஆடு, கறவை பசுக்கள் வழங்கப்பட உள்ளது. அம்மா இருசக்கர வாகனங்களை வாங்கி செல்லும் பெண்கள் ஹெல்மெட் அணிந்து பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் திருப்பூர் வடக்கு தொகுதியில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள 583 பேர்களில் முதற்கட்டமாக 272 பேருக்கு ரூ.68 லட்சம் மதிப்பிலான அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது. முடிவில் திட்ட உதவி இயக்குனர் ஆரோக்கியசாமி நன்றி கூறினார். இதில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், 1-வது மண்டல உதவி ஆணையாளர் வாசுக்குமார், முன்னாள் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் கருணாகரன், பட்டுலிங்கம், கணேஷ், 15 வேலம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் வி.கே.பி. மணி, முன்னாள் கவுன்சிலர்கள் பூலுவப்பட்டி பாலு, சின்னசாமி, பாலசுப்பிரமணியன், திலகர்நகர்சுப்பு, செந்தில், கோட்டாபாலு, விஜயகுமார், ரங்கசாமி, சபரி மற்றும் அரசு அதிகாரிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் மூலம் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா பல்லடத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த விழாவில் 375 பேருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்களை அமைச்சர் வழங்கினார். கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, மகளிர் திட்ட இயக்குனர் ரமேஷ், அ.தி.மு.க. நிர்வாகிகள் தண்ணீர்பந்தல் நடராஜன், சித்துராஜ், சரளை பி.ரத்தினசாமி, வைஸ் பி.கே.பழனிசாமி, சின்ராஜ், ஜெயக்குமார், சிவாச்சலம், ஹரிகோபால், கோபாலகிருஷ்ணன், மங்கலம் பகுதி சுப்பிரமணியம், சென்னியப்பன், தர்மலிங்கம், ராஜேந்திரன், திட்ட அலுவலர்கள், மகளிர் திட்ட பணியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லடம், பொங்கலூர், மங்கலம், சாமளாபுரம் மற்றும் பல பகுதிகளில் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட பெண்கள் பலர் பயன் அடைந்தனர்.



Next Story