பஸ் நிலையம் அருகே கழிவுநீர் அடைப்பை சரி செய்ய தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு


பஸ் நிலையம் அருகே கழிவுநீர் அடைப்பை சரி செய்ய தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 9 Dec 2018 10:30 PM GMT (Updated: 9 Dec 2018 9:22 PM GMT)

நாகை புதிய பஸ் நிலையம் அருகே கழிவுநீர் அடைப்பை சரி செய்ய தோண்டப்பட்ட பள்ளம் மூடப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோவில் ஆகியவை அமைந்துள்ளது. ஆதலால் நாகைக்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பேர் இங்கு வருகின்றனர். நாகை புதிய பஸ் நிலையம் அருகே ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பஸ்நிலைய நுழைவுவாயிலின் முன்பு உள்ள கால்வாய் வழியாக செல்கிறது. இந்த கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி சாலையில் செல்வது வழக்கம். இதனை நகராட்சி ஊழியர்களும், அவ்வப்போது சரி செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாயில் இருந்து தொடர்ந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க, பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டினர். ஆனால் தற்போது வரை கழிவுநீர் கால்வாயை சீரமைக்க தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படவில்லை. இதனை சுற்றி தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ் நிலையம் வழியாக வாகனங்களில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து வாகனஓட்டிகள் கூறியதாவது:- நாகை புதிய பஸ் நிலையம் அருகே பஸ்கள் திரும்பும் வளைவு பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், அதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை ஊழியர்கள் மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. தற்போது வரை அடைப்பு சீர் செய்யப்பட்டதா? என தெரியவில்லை. மேலும் அடைப்பை சரி செய்வதற்காக தோண்டப்பட்ட பள்ளமும் இன்று வரை மூடப்படவில்லை. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் சிரமத்துடன் செல்ல வேண்டியுள்ளது.

இதனால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பஸ்நிலையத்தில் இருந்து வெளியே வரும் பயணிகள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் அடைப்பை சரி செய்ய தோண்டப்பட்ட பள்ளத்தை உடனடியாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story