மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்: பொக்லைன் டிரைவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை - தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்: பொக்லைன் டிரைவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை - தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 11 Dec 2018 11:15 PM GMT (Updated: 11 Dec 2018 9:27 PM GMT)

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பொக்லைன் டிரைவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 30) பொக்லைன் டிரைவர். அதே பகுதியை சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளி பெண் பூப்பறிக்கும் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். அந்த பெண் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ந்தேதி மாலை தோட்டத்திற்கு பூப்பறிக்க சென்றார். அப்போது அவரை வழிமறித்த குமார் வலுக்கட்டாயமாக அருகே உள்ள மாந்தோப்பிற்கு அந்த பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுதொடர்பான புகாரின் பேரில் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது. அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் உமாமகேஸ்வரி ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், குமாருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி மாவட்ட மகளிர் நீதிபதி (கூடுதல் பொறுப்பு) ஜீவானந்தம் தீர்ப்பளித்தார். தண்டனை விதிக்கப்பட்ட குமார் பாதிக்க ப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.5 லட்சத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த தொகையை உரிய காலஅவகாசத்திற்குள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டால் குமாரிடம் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பயன்படுத்தி அந்த தொகையை வழங்கவும் அனுமதி அளித்து உத்தரவிடப் பட்டது.



Next Story