பெங்களூருவில் சந்தனமர கடத்தலில் ஈடுபட்டவர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு - போலீசாரை தாக்கி தப்ப முயன்றதால் நடவடிக்கை


பெங்களூருவில் சந்தனமர கடத்தலில் ஈடுபட்டவர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு - போலீசாரை தாக்கி தப்ப முயன்றதால் நடவடிக்கை
x
தினத்தந்தி 11 Dec 2018 10:58 PM GMT (Updated: 11 Dec 2018 11:13 PM GMT)

பெங்களூருவில், நேற்று போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய சந்தனமர கடத்தலில் ஈடுபட்டவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்து கைது செய்தனர்.

பெங்களூரு,

பெங்களூரு மத்திய மண்டல போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் மந்திரிகளின் வீட்டு வளாகத்தில் இருந்த சந்தனமரங்களை மர்மநபர்கள் வெட்டி கடத்தி சென்றனர். கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி கப்பன்பார்க் போலீஸ் எல்லைக்குட்பட்ட செயின்ட் மார்க்ஸ் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் இருந்த சந்தனமரம் வெட்டி கடத்தப்பட்டது.

இதுபற்றிய புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தனமரம் கடத்தலில் ஈடுபடுபவர்களை பிடிக்க கப்பன்பார்க் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யண்ணரெட்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர்.

இந்த நிலையில், சந்தனமர கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக சிக்பள்ளாப்பூரில் பதுங்கி இருந்த முஜாயித் உல்லா மற்றும் இம்தாத் உல்லா ஆகியோரை நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர், 2 பேரையும் தனிப்படை போலீசார் பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர். நேற்று அதிகாலை 1.30 மணியளவில் குயின்ஸ் ரோட்டில் வாகனம் சென்றது.

அப்போது, போலீஸ் வாகனத்தில் இருந்த போலீஸ்காரர் கிருஷ்ணமூர்த்தியை திடீரென்று தாக்கி கீழே தள்ளிவிட்டு முஜாயித் உல்லா தப்பியோடினார். இதை வாகனத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் அய்யண்ண ரெட்டி மற்றும் போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

தனிப்படை போலீசாரின் ஒருபிரிவினர் போலீஸ்காரர் கிருஷ்ணமூர்த்தியை மீட்க, இன்னொரு பிரிவினர் தப்பியோடிய முஜாயித் உல்லாவை விரட்டி சென்றனர். அப்போது, அவர் கப்பன் பூங்காவுக்குள் நுழைந்து பதுங்கி கொண்டார். இதுபற்றி அறிந்தவுடன் கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸ்காரர்கள் உதவிக்கு வந்தனர். இதையடுத்து முஜாயித் உல்லாவை போலீசார் தீவிரமாக தேடினார்கள்.

இந்த வேளையில், முஜாயித் உல்லாவை பிடிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் ரகீமை அவர் தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார். இதை பார்த்த இன்ஸ்பெக்டர் அய்யண்ணரெட்டி தனது துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டு சரண் அடையும்படி முஜாயித் உல்லாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இதனால் பயந்துபோன முஜாயித் உல்லா, சப்-இன்ஸ்பெக்டர் ரகீமை விட்டுவிட்டு தொடர்ந்து ஓடினார். மேலும் அவரை பிடிக்க சென்ற போலீஸ்காரர்களை கட்டையால் தாக்க முயன்றார். இந்த வேளையில், இன்னொரு சப்-இன்ஸ்பெக்டர் சுரேசை, முஜாயித் உல்லா தாக்க முயன்றார். இதனால் பாதுகாப்பு கருதி இன்ஸ்பெக்டர் அய்யண்ணரெட்டி, முஜாயித் உல்லாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

இதில் முஜாயித் உல்லாவின் காலில் குண்டு பாய்ந்தது. இதன் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். அவரைப்பிடித்து கைது செய்த போலீசார் பவுரிங் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

முன்னதாக காயமடைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகீம் மற்றும் போலீஸ்காரர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி கப்பன்பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழர்களின் தகவலால் போலீசில் சிக்கினர்

இதுகுறித்து பெங்களூரு மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் தேவராஜ் கூறியதாவது:-

சந்தனமரம் கடத்தல் தொடர்பாக தமிழ்நாடு சேலம் மாவட்டம் ஏற்காடு தாலுகா மாரமங்களா அருகே உள்ள கூடசடா கிராமத்தை சேர்ந்த லட்சுமண்(வயது 32), ஏற்காடு தாலுகா புலிகெரே கிராமத்தை சேர்ந்த ராமசாமி(40), பெங்களூரு ஆர்.டிந.கரை சேர்ந்த ரங்கநாதன் ஆகியோரை கைது செய்து இருந்தோம். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது சில முக்கிய தகவல்கள் கிடைத்தன. அந்த தகவல்களின் அடிப்படையில் சிக்பள்ளாப்பூரில் பதுங்கி இருந்த முஜாயித் உல்லா, இம்தாத் உல்லா ஆகியோரை கைது செய்தோம். போலீஸ்காரர் கிருஷ்ணமூர்த்தியை தாக்கி வாகனத்தில் இருந்து தள்ளிவிட்டு தப்பியோடியதோடு, சப்-இன்ஸ்பெக்டர் ரகீமை கொல்ல முயன்றதால் முக்கிய குற்றவாளியான முஜாயித் உல்லாவை துப்பாக்கியால் சுட்டு பிடித்தோம். இவர்களுக்கு 19-க்கும் அதிகமான சந்தன மரக்கடத்தல் வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. முஜாயித் உல்லா தனது கூட்டாளிகளான அம்ஜத் உல்லா, இம்தாத் உல்லா, லட்சுமண், ரங்கநாத், ராமசாமி, இளையராஜா, சத்யராஜூ, கோவிந்தசாமி மற்றும் சிவலிங்கா ஆகியோருடன் சேர்ந்து சந்தனமரங்களை வெட்டி, சந்தன மரக்கட்டைகளை கடத்தி உள்ளார். இந்த வழக்கில் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களையும் விரைவில் கைது செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.



Next Story