திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் கைது நகைகள், செல்போன் பறிமுதல்


திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் கைது நகைகள், செல்போன் பறிமுதல்
x
தினத்தந்தி 13 Dec 2018 10:15 PM GMT (Updated: 13 Dec 2018 7:40 PM GMT)

பெரம்பலூரில் மோட்டார்சைக்கிள் விற்பனை நிலையத்தில் செல்போன் மற்றும் மங்களமேடு பகுதியில் வீடுபுகுந்து நகை ஆகியவற்றை திருடியது தெரியவந்தது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள பிரபல மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான செல்போன் திருட்டு போனது. இதுகுறித்து, அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பெரம்பலூர் மேட்டுத்தெருவை சேர்ந்த சவுந்திரராஜன்(வயது 25) அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் பெரம்பலூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையிலான போலீசார், பெரம்பலூர் கடைவீதி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் திருவண்ணாமலை மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் பிரபாகரன்(25) என்பதும், அவர் பெரம்பலூர் ரோஜா நகரை சேர்ந்த வேல்முருகன் மனைவி எழிலரசி(39), நேரு நகரை சேர்ந்த வசந்தா(30) ஆகியோரிடம் நகைகளும், பெரம்பலூரில் மோட்டார்சைக்கிள் விற்பனை நிலையத்தில் செல்போன் மற்றும் மங்களமேடு பகுதியில் வீடுபுகுந்து நகை ஆகியவற்றை திருடியது தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 14½ பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பிரபாகரன் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

Next Story