தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளது - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி


தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளது - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
x
தினத்தந்தி 13 Dec 2018 11:30 PM GMT (Updated: 13 Dec 2018 11:21 PM GMT)

“தி.மு.க.– காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளது“ என்று மதுரையில் அளித்த பேட்டியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

மதுரை,

மதுரையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது–

மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு அ.தி.மு.க. அரசை காப்பாற்றும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கொண்டு இருக்கிறார். ஆனால் இன்றைய சூழ்நிலையில் பா.ஜ.க. தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத கட்சியாக உள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். 5 மாநில தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றிகரமான தோல்வி என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறி வருகிறார். அவர் விரக்தியில் இப்படி பேசுகிறார்.

கஜா புயல் நிவாரணத்துக்காக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட நெசவாளர்கள், துணிகளை தயாரித்து வைத்திருந்தனர். ஆனால் தமிழக அரசு, அந்த துணிகளை வாங்காமல், வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இதில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. இத்தகைய மோசடி செய்த தமிழக அரசுக்கு வருகிற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

டி.டி.வி.தினகரன் காங்கிரஸ் கட்சி மீது அக்கறை செலுத்த வேண்டாம். அவரது கட்சியே கரைந்து வருகிறது. தினகரன் அவரது கட்சியை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.

தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story