திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகை - 50 பெண்கள் உள்பட 220 பேர் கைது


திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகை - 50 பெண்கள் உள்பட 220 பேர் கைது
x
தினத்தந்தி 22 Dec 2018 4:06 AM IST (Updated: 22 Dec 2018 4:06 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50 பெண்கள் உள்பட 220 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதல் ஒரே அரசாணையின் மூலம் வழங்க வேண்டும். அலுவலகங்களில் குடிநீர், கழிவறை மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். கணினிவழி சான்றிதழ் மற்றும் இணையத்தள பணிகளுக்கு செலவு தொகை வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் அடிப்படை கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்திட வேண்டும் உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கடந்த 10-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று 12-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நீடித்தது. இதை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்க திருவாரூர் மாவட்ட தலைவர் கதிரேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜகுமார், மாவட்ட பொருளாளர் சற்குணம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட 220 பேரை கைது செய்தனர்.
1 More update

Next Story