பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: லாரி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது


பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: லாரி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 26 Dec 2018 11:15 PM GMT (Updated: 26 Dec 2018 9:26 PM GMT)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக லாரி டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள ஏ.பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 31). லாரி டிரைவர். ஒன்னப்ப கவுண்டனஅள்ளியை சேர்ந்தவள் 13 வயது சிறுமி. இவள் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறையில் மாணவி வீட்டில் இருந்து வருகிறாள்.

பழனிசாமி ஒன்னப்ப கவுண்டனஅள்ளியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி செல்வது வழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்று பழனிசாமி ஒன்னப்ப கவுண்டனஅள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளாள்.

இதை கவனித்த பழனிசாமி அங்கு சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இது குறித்து அக்கம்பக்கத்தினரிடம் கூறினாள். இதற்கிடையே பழனிசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பழனிசாமிக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.


Next Story