ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு - கைதிகள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு - கைதிகள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 29 Dec 2018 11:30 PM GMT (Updated: 29 Dec 2018 9:19 PM GMT)

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு கைதிகள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி,

திருச்சி உறையூர் பனிக்கன் தெருவை சேர்ந்தவர் துரைராஜ்(வயது 48). ஆட்டோ டிரைவரான இவர் கடந்த அக்டோபர் மாதம் கொலை செய்யப்பட்டு ராமலிங்கநகர் விஸ்தரிப்பு பகுதியில் ஆட்டோவில் சாக்கு மூட்டையில் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய உறையூர் பனிக்கன் தெருவை சேர்ந்த அப்பு என்கிற சரவணன்(37), ராமலிங்க நகரை சேர்ந்த தனபால், திருவெறும்பூர் மலைக்கோவிலை சேர்ந்த சுரேஷ், உறையூர் பாண்டமங்கலம் புது காலனியை சேர்ந்த சதீஸ் ஆகியோர் அரியலூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். கொலையாளிகளை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில், தீபாவளி சீட்டு பிடித்ததில் வசூல் தொடர்பான தகராறு காரணத்தால் கொலை செய்ததாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் அப்பு, தனபால் ஆகியோர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்களாக இருப்பதால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உறையூர் போலீசார், மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜுக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து கமிஷனர் அமல்ராஜ் உத்தரவை தொடர்ந்து அப்பு, தனபால் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, அதற்கான நகலில் திருச்சி சிறையில் உள்ள அவர்களிடம் போலீசார் கையெழுத்து பெற்றனர்.


Next Story