காட்பாடியில் பயங்கரம்: கத்தியால் குத்தி தந்தை கொலை - கல்லூரி மாணவர் கைது


காட்பாடியில் பயங்கரம்: கத்தியால் குத்தி தந்தை கொலை - கல்லூரி மாணவர் கைது
x
தினத்தந்தி 7 Jan 2019 11:25 PM GMT (Updated: 7 Jan 2019 11:25 PM GMT)

காட்பாடியில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

காட்பாடி,

வேலூரை அடுத்த காட்பாடி சேனூரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 57). இவர் அப்பகுதியில் இறைச்சி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி நிர்மலா. இவர்களுக்கு சுரேஷ் மற்றும் 17 வயதில் ஒரு மகன் உள்ளனர். சுரேசுக்கு திருமணமாகி மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். 2-வது மகன் வேலூரில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் முதலாமாண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் நிர்மலா கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து கண்ணன் வீட்டிற்கு வராமல் வெளியே தங்கி உள்ளார். அப்போது அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் 2-வது மகனின் படிப்பு செலவுக்கு பணம் கொடுக்காமல் கண்ணன் உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார்.

இதனை அறிந்த மகன்கள் இருவரும் தந்தையை கண்டித்துள்ளனர். மேலும் சொத்தை இருவரின் பெயருக்கும் மாற்றி தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு கண்ணன், உங்கள் தாயின் சிகிச்சைக்காக ஏராளமாக பணம் செலவு செய்து விட்டேன். அதனால் சொத்தில் இருவருக்கும் எந்த பங்கும் கிடையாது. என் விருப்பத்தின்படி சொத்துகளை யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைப்பேன். அதை கேட்க உங்களுக்கு உரிமை இல்லை என்று கூறி உள்ளார். அதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் மகன்கள் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கண்ணன் வீட்டிற்கு வந்து, தனது அறையில் தங்கினார். அப்போது அங்கு வந்த 2-வது மகன், தாயை சரியாக பராமரிக்கவில்லை. எனக்கும் படிப்பு செலவுக்கு பணம் தரவில்லை. எனவே சொத்தை வேறு யாருக்கும் எழுதி கொடுக்க கூடாது என்று கூறினார். அப்போது தந்தை, மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மகன், வீட்டு சமையல் அறையில் இருந்த கத்தியால் கண்ணனை குத்தினார். இதில் கண்ணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவரை தேடி வந்தனர். இதற்கிடையே கல்லூரி மாணவர் வஞ்சூர் கிராம நிர்வாக அலுவலர் ஷீலாவிடம் சரண் அடைந்தார். அவரை விருதம்பட்டு போலீசாரிடம் கிராம நிர்வாக அலுவலர் ஒப்படைத்தனர். அதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்ற மகனே தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story