பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சிவகாசியில் காங்கிரசார் உண்ணாவிரதம்


பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சிவகாசியில் காங்கிரசார் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 8 Jan 2019 11:45 PM GMT (Updated: 8 Jan 2019 10:45 PM GMT)

சிவகாசி பகுதியில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை உடனே திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

சிவகாசி,

பட்டாசு ஆலைகளை திறக்கக்கோரி அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சிவகாசி சட்சியாபுரம் பஸ் நிறுத்தம் அருகில் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சார்பில் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட தலைவர் ராஜாசொக்கர், தளவாய்பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர். சிவகாசி நகரமன்ற முன்னாள் தலைவர் சபையர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம் வரவேற்று பேசினார்.

அகில இந்திய அமைப்பு சாரா தொழிலாளர் கங்கிரஸ் அமைப்பின் தேசிய செயலாளர் எஸ்.எஸ்.பிரகாசம், மாநில தலைவர் மகேஸ்வரன், முன்னாள் மாவட்ட தலைவர் கணேசன், மாநில பொதுச்செயலாளர் துரைமுருகன், மாவட்ட தலைவர் மல்லீஸ்வரன், பட்டதாரி இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுசெயலாளர் மைக்கேல், மாணவரணி மாநில துணைத்தலைவர் சின்னதம்பி, வக்கீல் குப்பையாண்டி, வட்டார தலைவர் போத்தீஸ் சீனிவாசன், கவுன்சிலர் அய்யப்பன்,சேவாதளம் மாவட்ட தலைவர் சௌரிமலையான், முத்துமணி உள்பட பலர் பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட அகில இந்திய அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் அமைப்பின் தேசிய செயலாளர் எஸ்.எஸ்.பிரகாசம் கூறியதாவது:–

பட்டாசு தொழிலுக்கும், தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ராகுல்காந்தி அறிக்கை கேட்டுள்ளார். இந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரச்சினையில் மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாராளுமன்றத்தை முற்றுகையிடுவோம். ஜனாதிபதி, பிரதமரை சந்தித்து பட்டாசுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை நீக்க வலியுறுத்தி மனு கொடுக்க உள்ளோம். பசுமை பட்டாசுகளை கண்டுபிடிக்கும் வரை பேரியம்நைட்ரேட் வேதிப்பொருளுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்ள வேண்டும். பசுமை பட்டாசுகள் தயாரிப்பு நடைமுறைக்கு வந்த பின்னர் பேரியம்நைட்ரேட் வேதிப்பொருள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உண்ணாவிரத போராட்டம் குறித்து இளைஞர்காங்கிரஸ் மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம் கூறியதாவது:–

பட்டாசு ஆலைகளை மூடியதால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 4 லட்சம் தொழிலாளர்கள் தற்போது வேலை இல்லாமல் இருக்கிறர்கள். இந்த நிலை மாற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். இந்த நிலை நீடித்தால் பொதுமக்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவார்கள். படித்த பல லட்சம் இளைஞர்கள வேலை இல்லாமல் இருந்து வரும் நிலையில் பட்டாசு தொழிலால் வேலை செய்து வந்த 8 லட்சம் தொழிலாளர்களின் வேலைகளை இந்த மத்திய அரசு பறித்துள்ளது. பட்டாசு ஆலைகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் கட்சியின் தலைமையிடம் உரிய அனுமதி பெற்று அடுத்த கட்டம் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story