ரெயில் மறியல்;182 பேர் கைது


ரெயில் மறியல்;182 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2019 10:45 PM GMT (Updated: 9 Jan 2019 10:34 PM GMT)

மதுரை பகுதியில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 182 பேர் கைது செய்யப்பட்டனர்

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றத்தில் சி.ஐ.டி.யூ. சார்பில் ரெயில் மறியல் நடந்தது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை விரிவுபடுத்தி 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். மத்திய, மாநில பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும். விவசாய விலை பொருட்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். அனைத்து தொழிலாளர் நலச்சட்டங்களை முனைப்புடன் அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இந்த ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.

மறியலில் ஈடுபட்ட சி.ஐ.டி.யூ. மாநில துணை தலைவர் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் பொன்.கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் எஸ்.எம்.பாண்டி, மாதர் சங்க தாலுகா செயலாளர் விஜயா உள்பட 52 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு தொழிற்சங்கம் சார்பில் மாவட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையில் 77 பேர் ரெயிலை மறிக்க முயன்றனர். இதேபோல் விமானநிலைய சாலை பகுதியில் தண்டவாளப்பகுதியில் ரெயிலை மறிக்க முயன்ற மார்க்சிஸ்ட் தொழில் சங்க தாலுகா செயலாளர் முத்துராமன் தலைமையில் 53 பேர் ரெயிலை மறிக்க முயன்றனர். அவர்களை போலீசார் செய்தனர்.

உசிலம்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் செல்லக்கண்ணு, ஒன்றிய செயலாளர் ராமர், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி சங்க நிர்வாகி அறிவு ஆகியோர் தலைமையில் பஸ்நிலையம் முன்பு மறியல் நடந்ததுஇதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 110 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல் எழுமலையில் உள்ள எம்.கல்லுப்பட்டி சாலையில் மாதர் சங்க மாவட்ட தலைவர் முத்துராணி, மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குனர்கள் சங்க மாவட்ட தலைவர் தங்கவேல்பாண்டியன், சேடபட்டி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் ஜெயபால் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் செய்தனர். மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 61 பேரை எழுமலை போலீசார் கைது செய்தனர்.

Next Story