கடலூர் முதுநகரில் பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த 3 பேர் கைது - கண்காணிப்பு கேமரா மூலம் துப்பு துலங்கியது


கடலூர் முதுநகரில் பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த 3 பேர் கைது - கண்காணிப்பு கேமரா மூலம் துப்பு துலங்கியது
x
தினத்தந்தி 16 Jan 2019 11:00 PM GMT (Updated: 16 Jan 2019 10:04 PM GMT)

கடலூர் முதுநகரில் பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் போலீசாரிடம் சிக்கினர்.

கடலூர்,

கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் முதல் தளத்தில் வசித்து வருபவர் அண்ணாமலை மனைவி விஜயலட்சுமி(வயது 67). கணவரை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வரும் இவர் அருகிலேயே பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது வீட்டுக்கு கடந்த 13-ந்தேதி பிற்பகல் 2.45 மணி அளவில் வந்த மர்ம நபர்கள், குடியிருப்பில் வீடு வாடகைக்கு கிடைக்குமா? என்று கேட்டனர். அதற்கு அவர் இல்லை என்று கூறினார். உடனே அவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர்.

இதையடுத்து விஜயலட்சுமி தண்ணீர் எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் திடீரென அவரை சத்தம் போட விடாமல் தடுத்து, அவரது வாயில் துணியை வைத்து அமுக்கினர். கண்களையும் துணியால் கட்டினர். இதில் தப்பிக்க முயன்ற அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் அவரது கால்களையும் கூடை பின்னும் ஒயரால் கட்டிப்போட்டனர்.

பின்னர் விஜயலட்சுமியை மிரட்டி, அவர் கையில் அணிந்திருந்த 2 வளையல்களையும் கவரிங் என்று தெரியாமல் கழற்றினர். தொடர்ந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் நகையையும் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

இது பற்றி கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் விஜயலட்சுமி வீட்டுக்கு அருகில் தனியார் நிறுவனத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சி களை முதுநகர் போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், பச்சையாங்குப்பம் முத்தாலம்மன்கோவில் தெரு கிருஷ்ணராஜ் மகன் சதீஷ்குமார் (30), வடலூர் ஆபத்தாரணபுரம் கதிர்வேல் மகன் சந்தோஷ்குமார் (21), திருவள்ளூர் மாவட்டம் பாப்பன்சத்திரம் ராமானுஜம் மகன் ரஞ்சித் என்ற சத்தியமூர்த்தி (31) ஆகிய 3 பேரும் விஜயலட்சுமி வீட்டில் இருந்து தப்பி ஓடியது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது.

இதை வைத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது, அவர்கள் 3 பேர் சேர்ந்து தான் விஜயலட்சுமி வீட்டுக்குள் புகுந்து, அவரை கட்டிப்போட்டு நகையை கொள்ளையடித்து சென்றது உறுதியானது. இதை அவர்களும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2½ பவுன் நகையையும் போலீசார் மீட்டனர்.


Next Story