புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு கார்களில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் 2 பேர் கைது


புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு கார்களில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 Jan 2019 9:45 PM GMT (Updated: 18 Jan 2019 8:05 PM GMT)

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு கார்களில் கடத்திய மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் சரக மத்திய புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் நேற்று காலை விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில், அந்த காரில் 245 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே கார் டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர் சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 30) என்பதும், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து கண்ணனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்து விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

இதேபோல் விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு தனிப்படை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் கோட்டக்குப்பம் செட்டிநகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்ததில், அந்த காரில் 1,044 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து காரை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர், கோட்டக்குப்பம் ரஹமத் நகரை சேர்ந்த ரஹீம் (33) என்பதும், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது. தொடர்ந்து, ரஹீமை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.


Next Story