திருப்பூரில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை மர்ம ஆசாமிகள் கைவரிசை


திருப்பூரில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை மர்ம ஆசாமிகள் கைவரிசை
x
தினத்தந்தி 20 Jan 2019 10:15 PM GMT (Updated: 20 Jan 2019 2:45 PM GMT)

திருப்பூரில் கருமாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்து பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் பி.என்.ரோடு பாண்டியன்நகரை அடுத்த அண்ணாநகர் பகுதியில் கருமாரியம்மன் கோவில் உள்ளது. அந்த கோவில் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த யோகமுருகன் என்கிற கதிரவன் இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிலில் பூஜை முடிந்ததும் கோவில் முன்பக்க இரும்பு கதவை பூட்டி விட்டு பூசாரி யோகமுருகன் வீட்டிற்கு சென்று விட்டார்.

பின்னர் நேற்று காலை வழக்கம்போல் பூஜை செய்ய கோவிலுக்கு பூசாரி சென்றுள்ளார். அப்போது கோவில் முன்பக்க கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த உண்டியலை காணவில்லை. ஆனால் உண்டியலில் போடப்பட்டு இருந்து மஞ்சள் கயிறு மற்றும் மஞ்சள் கயிறுடன் இணைக்கப்பட்டு இருந்த சில தாலிகள் மட்டும் கிடந்தன.

இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசில் யோகமுருகன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவம் நடந்த கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். கோவில் உண்டியலை மர்ம ஆசாமிகள் அங்குள்ள காட்டுப்பகுதியில் வீசிச்சென்றுள்ளார்களா? என்று போலீசார் தேடிப்பார்த்தனர். அப்போது அங்குள்ள காட்டுப்பகுதியில் உண்டியல் கிடந்தது. அதில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

சம்பவத்தன்று இரவு கோவிலுக்கு சென்ற ஆசாமிகள், கோவிலின் வெளியே இருந்த சூலாயுதத்தால் கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்றதும், பின்னர் அங்கிருந்த உண்டியலையும் உடைத்து அதில் இருந்த பணம், அதில் இருந்த நகை மற்றும் தங்க காசுகளை கொள்ளையடித்ததும், தாலிக்கயிற்றை அங்கேயே விட்டு விட்டு உண்டியலை மட்டும் காட்டுப்பகுதியில் வீசி சென்று உள்ளனர்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை 1–ந்தேதி உண்டியலை திறந்து காணிக்கை பணத்தை எண்ணுவது வழக்கம். அதன்படி கடந்த சித்திரை மாதம் உண்டியலை திறந்து அதில் இருந்த பணத்தை எண்ணியபோது அதில் ரூ.70 ஆயிரம் இருந்தது. எனவே இந்த ஆண்டும் சுமார் ரூ.70 ஆயிரம் பணம் இருந்திருக்கலாம் என்றும், அந்த பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story