புயல் நிவாரணம் பாரபட்சமின்றி வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


புயல் நிவாரணம் பாரபட்சமின்றி வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 21 Jan 2019 10:45 PM GMT (Updated: 21 Jan 2019 7:04 PM GMT)

புயல் நிவாரணம் பாரபட்சமின்றி வழங்கக்கோரி திருத்துறைப்பூண்டி அருகே மேலமருதூரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி,

டெல்டா மாவட்ட பகுதியான திருத்துறைப்பூண்டியில் கஜா புயலின் தாக்கத்தால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பல்வேறு இடங்களில் நிவாரணம் வழங்கவில்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அரசு வழங்கும் புயல் நிவாரண பொருட்களை அனைவருக்கும் பாரபட்சம் இன்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மேலமருதூர் ஊராட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் சாலையில் மேலமருதூர் கடைத்தெருவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன்,சப்-இன்ஸ்பெக்டர்கள் குணா, ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைதொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல மன்னார்குடியில் 1-வது மற்றும் 2-வது வார்டு பகுதிகளில் கஜா புயல் நிவாரண பொருட்களை கூரை மற்றும் ஓட்டு வீடுகளில் வசிப்பவர்கள் மட்டுமல்லாது அனைத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று அப்பகுதி பொதுமக்கள் மன்னார்குடி-கும்பகோணம் சாலையில் ஹரித்ராநதி தெப்பக்குளம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி போலீசார் அங்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நிவாரண பொருட்கள் வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார், பொதுமக்களிடம் கூறினர். இதனால் மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் மறியலால் மன்னார்குடி-கும்பகோணம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story