ஆசிரியை பணி மாற்றத்துக்கு எதிர்ப்பு: தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் போராட்டம்


ஆசிரியை பணி மாற்றத்துக்கு எதிர்ப்பு: தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் போராட்டம்
x
தினத்தந்தி 21 Jan 2019 10:45 PM GMT (Updated: 21 Jan 2019 8:38 PM GMT)

தொடக்கப்பள்ளி ஆசிரியையின் பணி மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த முதன்மை கல்வி அதிகாரியையும் முற்றுகையிட்டனர்.

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம், புன்செய்தோட்டக்குறிச்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், கரூர் ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை நடக்கிறது. இதில் 57 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக சுமதியும், ஆசிரியைகளாக ஹரிபிரியா, அம்பிகா ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் ஆங்கில ஆசிரியை அம்பிகா திடீரென பணி மாற்றம் செய்யப்பட்டு, அருகில் உள்ள அங்கன்வாடிக்கு பணி அமர்த்தப்பட்டார். இதற்கு தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கல்வி வட்டார அதிகாரி சந்திரிகா சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசாணை உத்தரவின்படியே ஆசிரியை மாற்றப்பட்டதாக கூறினார். அதற்கு மாணவ- மாணவிகள் ஜூன் மாதத்தில் மாற்றியிருந்தால் பரவாயில்லை. இப்போது திடீரென்று மாற்றினால் எங்களுக்கு கல்வி பாதிக்கப்படும் எனக்கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்டக்கல்வி அதிகாரி கனகராஜ் சம்பவ இடத்திற்கு வந்து மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு முதன்மை கல்வி அதிகாரி தங்கவேல் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவ-மாணவிகள் கல்வி அதிகாரியை முற்றுகையிட்டு, அவரை பள்ளிக்கு உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர். இதையடுத்து முதன்மை கல்வி அதிகாரி கூறுகையில், சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு பதிலாக வேறு ஒரு ஆசிரியை நியமிக்கிறோம் என்றார். இதையடுத்து மாணவ-மாணவிகள் சமாதானம் அடைந்து தங்களது வகுப்புகளுக்கு சென்றனர். இந்த போராட்டத்தில் மாணவ-மாணவிகளுடன் பெற்றோரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story