இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் வைகோ பேச்சு


இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் வைகோ பேச்சு
x
தினத்தந்தி 21 Jan 2019 11:00 PM GMT (Updated: 21 Jan 2019 8:47 PM GMT)

இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வைகோ பேசினார்.

மலைக்கோட்டை,

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் தமிழ் இலக்கிய சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு கிறிஸ்தவமும், தமிழும் என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கிறிஸ்தவமும் தமிழும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதவை. உலகத்தின் முதல் மொழி தமிழ். தமிழுக்கு மகுடம் சூட்டியவர்கள் நாயன்மார்கள், ஆழ்வார்கள், சமணர்கள் வரிசையில் உள்ளவர்களை போன்றவர்கள் கிறிஸ்தவ பாதிரியார்கள். எந்த சமயமாக இருந்தாலும் அது அவரவருக்கு உயர்ந்த சமயமே. சமய நல்லிணக்கம் தழைக்க வேண்டிய நேரம் இது. உலகத்தின் முதல் மொழியான தமிழ் மொழி ஐ.நா. சபையின் 6 மொழிகளில் ஒன்றாக இடம்பெற வேண்டாமா?. அது என் காலத்தில் நடைபெறாது. உங்கள் காலத்திலாவது நடக்க வேண்டும். இன்றைய வரலாற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு இந்தியா என்றொரு நாடு கிடையாது. இந்து என்ற சொல் பழைய தமிழ் இலக்கியங்கள் எதிலும் கிடையாது. உலகில் 125 நாடுகளில் 12 கோடி தமிழர்கள் வாழ்கின்றனர். தமிழருக்கு என்று ஒரு நாடு இல்லையே.

இலங்கையில் சிங்கள நாடு வேறு, தமிழ் நாடு வேறு, சிங்கள இனம் வேறு, தமிழர் இனம் வேறு. தனித்தனியாக இருந்த இரு நாடுகளை ஆங்கிலேயர்கள் இலங்கையில் இருந்து வெளியேறும் போது ஓர் ஒப்பந்தம் போட்டு ஒன்றாக இணைத்து, தமிழ் மக்களை சிங்களர்களுக்கு அடிமையாக்கிவிட்டு சென்று விட்டனர். ஹிட்லர் கூட செய்ய தயங்கிய கொடூரங்களை சிங்கள ராணுவம் அரங்கேற்றியுள்ளது.

ஹேசிமின், சேகுவாரா, பிடல்காஸ்ட்ரோ வரிசையில் போர் நடத்திய பிரபாகரனும் அழிக்கப்பட்டார். இது ஒரு இனப்படுகொலை. இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தமிழர் பகுதியில் இருந்து சிங்கள ராணுவம் வெளியேற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

Next Story