200 பேரிடம் ரூ.15 கோடி மோசடி தபால் அலுவலக ஏஜெண்டு கைது மனைவி, மகளும் சிக்கினர்


200 பேரிடம் ரூ.15 கோடி மோசடி தபால் அலுவலக ஏஜெண்டு கைது மனைவி, மகளும் சிக்கினர்
x
தினத்தந்தி 21 Jan 2019 11:58 PM GMT (Updated: 21 Jan 2019 11:58 PM GMT)

தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கி கொடுத்து 200 பேரிடம் ரூ.15 கோடி மோசடி செய்த தபால் அலுவலக ஏஜெண்டு, மனைவி, மகளுடன் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை மாகிம் மோரி ரோடு பகுதியில் உள்ள தபால் அலுவலகத்தில் ஏஜெண்டாக இருந்து வந்தவர் ரமேஷ்(வயது65). இவரது மகள் பூமிகாவும் அங்கு ஏஜெண்டாக இருக்கிறார். இவர்கள் இருவரும் தபால் அலுவலகத்தில் பலருக்கு சேமிப்பு திட்ட கணக்குகளை தொடங்கி கொடுத்தனர்.

இந்தநிலையில் இவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்கி கொடுத்த மாகிமை சேர்ந்த டியூசன் ஆசிரியர் மிப்பு என்பவர் தனது கணக்கில் ரூ.26 லட்சம் போட்டு வைத்திருந்தார். சில தினங்களுக்கு முன் அந்த பணத்தை எடுக்க முயன்றபோது, அதில் வெறும் ரூ.4 ஆயிரம் மட்டும் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதில், மிப்பு தனது சேமிப்பு கணக்கில் செலுத்த கொடுத்த பணத்தை ரமேஷ் கையாடல் செய்துவிட்டு, அவர் சேமிப்பு கணக்கில் பணம் செலுத்தியது போல் போலி ரசீதுகளை வழங்கியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதுபற்றி மிப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் ரமேஷ், மகள் பூமிகா ஆகிய இருவரும் சேர்ந்து இதே பாணியில் 200 பேரிடம் ரூ.15 கோடி வரை மோசடி செய்திருந்ததும், இந்த மோசடிக்கு ரமேஷின் மனைவி யோகிதாவும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மிராரோட்டில் பதுங்கி இருந்த ரமேஷ், அவரது மனைவி, மகள் 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story