நடிகர் அஜித்தின் அறிவிப்புக்கு பாராட்டு: ‘மோடியின் திட்டத்தால் பலன் பெற்ற வீடுகளில் தாமரை தீபம் ஏற்றப்படும்’ தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


நடிகர் அஜித்தின் அறிவிப்புக்கு பாராட்டு: ‘மோடியின் திட்டத்தால் பலன் பெற்ற வீடுகளில் தாமரை தீபம் ஏற்றப்படும்’ தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 22 Jan 2019 11:15 PM GMT (Updated: 22 Jan 2019 7:12 PM GMT)

‘மோடியில் திட்டங்களால் பலன் பெற்ற வீடுகளில் தாமரை தீபம் ஏற்றப்படும்’ என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

செம்பட்டு,

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பாரதீய ஜனதா தயாராகி வருகிறது. இதையொட்டி, பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திரமோடியின் ஆலோசனைப்படி வீடு, வீடாக சென்று மத்திய அரசின் சாதனைகள், திட்டங்கள் எடுத்து கூறப்படும்.

குறிப்பாக மோடியின் திட்டங்களால் பலன் பெற்ற வீடுகளில் தாமரை தீபம் ஏற்றப்படும். மேலும் இது பாரதீய ஜனதா கட்சி குடும்பம். இது பாரதீய ஜனதா கட்சி வீடு என்று கூறி அறிவிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பலன் பெற்ற குடும்பத்தினரை பாரதீய ஜனதாவோடு இணைப்பதற்கான கூட்டமும் நடக்கிறது. எங்கள் வாக்குச்சாவடி பலமான வாக்குச்சாவடி ஆகும். இதை நிரூபிக்கும் வகையிலான பிரசாரத்தை விரைவில் தொடங்குவோம்.

தமிழகத்தில் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் காவிரியுடன் கோதாவரியை இணைக்கும் திட்டம் குறித்து மத்திய மந்திரி நிதின்கட்கரியின் அறிவிப்பு சாத்தியப்படகூடியதாகும். இதன் மூலம் காவிரி பிரச்சினை தீரும். கோதாவரி தண்ணீரும் கிடைக்கும். வருங்காலத்தில் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை வராது.

திருச்சியில் ராணுவ தளவாட வழித்தட திட்டம் தொடங்கப்பட்டதன் மூலம் திருச்சிக்கு ரூ.3,300 கோடி முதலீடு கிடைத்துள்ளது. இதனால் திருச்சி மட்டுமல்ல, 4 மாவட்டங்களும் பயன் பெறும். எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அடிக்கல் நாட்டு விழாவுக்காக பிரதமர் மோடி வருகிற 27-ந் தேதி மதுரை வருகிறார். இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் பிரமாண்ட முயற்சியும் நடந்து வருகிறது. இது நமது நாட்டிற்கு பெருமை ஆகும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் மத்திய அரசின் திட்டங்களால் பயன்பெற்று வருகிறது. இவற்றையெல்லாம் மறந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு மத்திய அரசு என்ன செய்தது என கேள்வி எழுப்பி வருகிறார்.

அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்ற நடிகர் அஜித்தின் அறிவிப்பு பாராட்டுக்குரியது. திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் அவரது ரசிகர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எங்கள் கட்சியில் வந்து சேர்ந்தார்கள். நான் ஆஸ்பத்திரியில் ஒரு குழந்தைக்கு சிகிச்சை அளித்தபோது, நடிகர் அஜித் உதவி செய்வதாக பெற்றோர் கூறினர். இதன் அடிப்படையில் நல்ல கட்சியில் ரசிகர்கள் சேர்ந்தது வரவேற்கத்தக்கது. அரசியலில் இளைஞர்கள் யார் வேண்டுமானாலும் ஈடுபடலாம். அது நடிகர் விஜய், அஜித் என யாருடைய ரசிகர்களாகவும் இருக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின்போது திருச்சி மாவட்ட தலைவர் தங்க.ராஜைய்யன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். அதன் பின்னர் திருச்சியில் பாரதீய ஜனதா நிர்வாகிகளுடன் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை நடத்தினார். 

Next Story