பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்–ஜீப் டிரைவர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை


பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்–ஜீப் டிரைவர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
x
தினத்தந்தி 29 Jan 2019 11:00 PM GMT (Updated: 29 Jan 2019 2:45 PM GMT)

லஞ்சம் வாங்கியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் அவருடைய ஜீப் டிரைவர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் கோபி அருகே பரபரப்பு ஏற்பட்டது.

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சின்னமொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் பதி (வயது 48). இவர் சத்தியமங்கலம் போக்குவரத்து போலீசில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் வாகன தணிக்கையில் ஈடுபடும் போது லாரி டிரைவர்களிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் லாரி டிரைவர்கள் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மாறுவேடத்தில் லாரி ஓட்டிச்சென்றனர். அப்போது சத்தியமங்கலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதி, அந்த லாரியை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது.

இதனால் மாறு வேடத்தில் இருந்தவர்கள் தாங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையினர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டதோடு, விசாரணை நடத்த வேண்டும் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு வாருங்கள் என்று போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதியை அழைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பதி அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் லாரி டிரைவர்களிடம் லஞ்சம் வாங்கியதாக போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதி, பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ் மற்றும் அதிகாரிகள், கோபி சின்ன மொடச்சூர் திரு.வி.க. வீதியில் உள்ள பதி வீட்டுக்கு திடீரென காரில் சென்றனர். அங்குள்ள ஒரு வீட்டின் மாடியில் பதியின் வீடு உள்ளது.

மாடிப்படி ஏறி வீட்டுக்குள் அதிரடியாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நுழைந்தனர். அப்போது பதி மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் இருந்தார்கள். அனைவருடைய செல்போன்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வாங்கி வைத்துக்கொண்டார்கள். அதன்பின்னர் கதவுகளையும், ஜன்னல்களையும் மூடிக்கொண்டு ஒவ்வொரு இடமாக துருவி துருவி சோதனை செய்தார்கள். மாலை வரை சோதனை தொடர்ந்தது. ஆனால் ஆவணங்கள் எதையும் போலீசார் கைப்பற்றவில்லை.

இதேபோல் பதியின் ஜீப் டிரைவர் சத்தியமங்கலம் காலனியை சேர்ந்த மனோஜ் என்பவருடைய வீட்டிலும் நேற்று காலை 8 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினார்கள்.

அப்போது வீட்டில் மனோஜின் மனைவி மட்டும் இருந்தார். இந்த சோதனையில் பதியின் மடிக்கணினி, அவருடைய அடையாள அட்டை, மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை அவருக்கு அனுப்பிய நோட்டீசு ஆகியவை கைப்பற்றப்பட்டது. மாலை 4 மணி அளவில் போலீசார் மனோஜின் வீட்டில் சோதனையை முடித்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் அவருடைய ஜீப் டிரைவர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியது அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story