பாலக்கோடு அருகே யானையை சுட்டுக்கொன்ற 3 பேர் கைது நாட்டு துப்பாக்கி பறிமுதல்


பாலக்கோடு அருகே யானையை சுட்டுக்கொன்ற 3 பேர் கைது நாட்டு துப்பாக்கி பறிமுதல்
x
தினத்தந்தி 29 Jan 2019 11:00 PM GMT (Updated: 29 Jan 2019 9:04 PM GMT)

பாலக்கோடு அருகே யானையை சுட்டுக்கொன்றது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே காப்புக்காடு பகுதியில் கடந்த மாதம் 25-ந்தேதி 22 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் யானை இறந்து கிடந்தது. இதுபற்றி பாலக்கோடு வனச்சரகர் செல்வம் மற்றும் வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று விசாரித்தனர். கால்நடை மருத்துவர் பிரகாஷ் அங்கு வந்து யானையின் உடலை பரிசோதனை செய்தார். அப்போது யானை குண்டு பாய்ந்து இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் மற்றும் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், யானை சுடப்பட்டு செத்து கிடந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன் மகன் முனிராஜ் (வயது 29), திருப்பதி மகன் மணி (42) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களுக்கு நாட்டு துப்பாக்கி கொடுத்து உதவியதாக ஆறுமுகம் மகன் ஜெயவேல் (55) என்பவரையும் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் பென்னாகரம் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.

Next Story