சொத்து தகராறில் உருட்டுக்கட்டையால் அடித்து விவசாயி கொலை அண்ணன்-அண்ணி கைது


சொத்து தகராறில் உருட்டுக்கட்டையால் அடித்து விவசாயி கொலை அண்ணன்-அண்ணி கைது
x
தினத்தந்தி 12 Feb 2019 10:15 PM GMT (Updated: 12 Feb 2019 6:37 PM GMT)

பட்டுக்கோட்டை அருகே சொத்து தகராறில் உருட்டுக்கட்டையால் அடித்து விவசாயி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய அண்ணன்-அண்ணியை போலீசார் கைது செய்தனர்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சஞ்சாய நகரை சேர்ந்தவர்கள் அருளானந்தம் (வயது 42), ஆரோக்கியசாமி(40). அண்ணன்-தம்பியான இவர்கள் இருவரும் விவசாயிகள். இவர்களுக்கு இடையே சொத்து பிரச்சினை சம்பந்தமாக தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் ஆரோக்கியசாமி வீட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவருடைய அண்ணன் அருளானந்தம், தனது தம்பி ஆரோக்கியசாமியை திட்டிப் பேசியுள்ளார்.

இதைக்கேட்ட ஆரோக்கியசாமி, ஏன் இப்படி பேசுகிறாய்?‘ என்று தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் அருளானந்தம் அவருடைய மனைவி விக்டோரியா மேரி(35) ஆகிய இருவரும் சேர்ந்து ஆரோக்கியசாமியை உருட்டுக் கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த ஆரோக்கியசாமியை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து அவரை சிகிச்சைக்காக உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆரோக்கியசாமியின் மனைவி லீமா ரோஸ், பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து அருளானந்தம் அவருடைய மனைவி விக்டோரியா மேரி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story