என்ஜினீயர் வீட்டில் கொள்ளை: சிறுவன் உள்பட 3 பேர் கைது 37 பவுன் நகை மீட்பு


என்ஜினீயர் வீட்டில் கொள்ளை: சிறுவன் உள்பட 3 பேர் கைது 37 பவுன் நகை மீட்பு
x
தினத்தந்தி 17 Feb 2019 10:15 PM GMT (Updated: 17 Feb 2019 9:09 PM GMT)

மணவாளக்குறிச்சி அருகே என்ஜினீயர் வீட்டில் கொள்ளையடித்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 37 பவுன் நகை மீட்கப்பட்டது.

மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி அருகே வருக்கத்தட்டு பகுதியை சேர்ந்தவர் அருணைநாதன் (வயது 50). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மல்லிகா. சில தினங்களுக்கு முன்பு மல்லிகா வீட்டை பூட்டிவிட்டு உரப்பனவிளையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 61 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த துணிகர கொள்ளை குறித்து மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் 2 தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் கல்லுக்கட்டி பகுதியில் ரோந்து சென்றார். அப்போது, சாலையோரம் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 17 வயது சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவனிடம் இருந்த 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அத்துடன் சிறுவனை கைது செய்து துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த சிறுவனுக்கும், வருக்கத்தட்டு பகுதியில் என்ஜினீயர் வீட்டில் 61 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சிறுவனும், மேலும் இரண்டு பேரும் சேர்ந்து வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டான்.

தொடர்ந்து, சிறுவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட ஆலங்கோட்டையை சேர்ந்த திவாகரன் (19), கண்ணக்குறிச்சியை சேர்ந்த அஜித்குமார் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 37 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 3 பேரும் இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

Next Story