வீரபாண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி 2 வாலிபர்கள் பலி


வீரபாண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 18 Feb 2019 10:45 PM GMT (Updated: 18 Feb 2019 9:29 PM GMT)

வீரபாண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் 2 வாலிபர்கள் பலியாகினர்.

உப்புக்கோட்டை, 

வீரபாண்டி அருகே உள்ள சீப்பாலக்கோட்டையை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகன் பைரவன் (வயது 19). இவர் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர், தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த முப்புலியான் மகன் மாதவன் (19), சின்னமணி மகன் அபிமன்யு (19) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பைரவன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். மாதவன், சின்னமணி பின்னால் அமர்ந்திருந்தனர்.

அதே பகுதியில் உள்ள கருப்பசாமி கோவில் முன்பு சென்றபோது எதிரே வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பைரவன் மற்றும் மாதவன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அபிமன்யு பலத்த காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வேன் டிரைவரான வருசநாடு தங்கமாள்புரத்தை சேர்ந்த ராஜ்குமார் (38) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story