நடுக்கடலில் மீன்பிடித்த 9 மீனவர்கள், 2 விசைப்படகுகள் சிறைபிடிப்பு


நடுக்கடலில் மீன்பிடித்த 9 மீனவர்கள், 2 விசைப்படகுகள் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 20 Feb 2019 10:15 PM GMT (Updated: 20 Feb 2019 9:29 PM GMT)

ராமேசுவரம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த 9 மீனவர்கள், 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 500–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2,500 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை பார்த்தவுடன், அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர். தொடர்ந்து சில விசைப்படகுகளில் இறங்கிய இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலைகளை அறுத்து கடலில் எறிந்தனர். இதனால் மற்ற படகுகளில் இருந்து மீனவர்கள் உடனடியாக தங்களது விசைப்படகுகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர்.

இதற்கிடையே பல விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்தனர். மேலும் 2 படகுகளையும், அதில் இருந்த 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட படகுகளில் இருந்த மீனவர்கள் ராமேசுவரத்தில் இருந்து சென்றவர்களா அல்லது மண்டபத்தில் இருந்து சென்றவர்களா? என்பது தெரியவில்லை. மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு வந்தபிறகே அதன் விவரம் தெரியவரும் என்று மீனவர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story