அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைச்சர் நமச்சிவாயம் குற்றச்சாட்டு


அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைச்சர் நமச்சிவாயம் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 23 Feb 2019 12:15 AM GMT (Updated: 22 Feb 2019 11:18 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக புதுவை காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை தனியார் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

முதல்–அமைச்சர் நாராயணசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, விஜயவேணி மற்றும் தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி.சிவக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ராஜாங்கம், புதிய நீதி கட்சி பொன்னுரங்கம், ராஷ்டீரிய ஜனதா தலைவர் சஞ்சீவி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.

கூட்டம் முடிந்தவுடன் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கவர்னர் மாளிகை முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கவர்னரிடம் நடந்த பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் தொடர்பாக இன்று (நேற்று) முடிவு எடுப்பதாக தெரிவித்தார். அவர், முதியோர் உதவித்தொகை தவிர மற்ற கோரிக்கைகள் தொடர்பாக சாதகமான பதிலை அளிக்கவில்லை. எனவே கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மீண்டும் போராட்டத்தை தொகுதி வாரியாகவும், ஒவ்வொரு கிராமங்களில் தெருமுனை பிரசாரம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேட்பாளர்களை வெற்றிபெற செய்வது தொடர்பான யுக்திகளை கையாளுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. கட்சி தலைவர் அறிவித்த வேட்பாளர் வெற்றி பெற பாடுபடுவோம். என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாகும். ஜெயலலிதாவுக்கு செய்த துரோகமாகவும் எண்ணுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story