இந்திய விமான படை அதிரடி தாக்குதல்: “பிரதமர் மோடியின் துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது” - அமைச்சர் மணிகண்டன் பேச்சு


இந்திய விமான படை அதிரடி தாக்குதல்: “பிரதமர் மோடியின் துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது” - அமைச்சர் மணிகண்டன் பேச்சு
x
தினத்தந்தி 27 Feb 2019 11:00 PM GMT (Updated: 27 Feb 2019 9:59 PM GMT)

இந்திய விமான படையின் மூலம் அதிரடி தாக்குதல் நடத்திய பிரதமர் மோடியின் துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று அமைச்சர் மணிகண்டன் பேசினார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், மாவட்ட அவை தலைவர் முருகேசன் தலைமையில் நடந்தது. நகர செயலாளர் அங்குச்சாமி வரவேற்றார். இந்த கூட்டத்தில் அமைச்சர் மணிகண்டன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு அமைச்சர் பேசியதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பூஜ்ஜியம் எடுத்தது. அதேபோன்று வருகிற தேர்தலிலும் அந்த கூட்டணிக்கு பூஜ்ஜியம் தான் கிடைக்கும். அ.தி.மு.க. அமைத்துள்ள மெகா கூட்டணியால் விரக்தியடைந்த ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று ஊராட்சி சபை கூட்டத்தை நடத்தி வருகிறார். ஸ்டாலின் அமைத்துள்ள கூட்டணி இந்த தேர்தலிலும் வெற்றிபெறாது. அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் பா.ம.க. கூட்டணி 40 இடங்களையும் வெல்லும். இதேபோல சட்டமன்ற இடைத்தேர்தலிலும் 21 தொகுதியிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும்.

2016-ம் ஆண்டு மக்கள் நலக்கூட்டணி மண்ணை கவ்வியது போல தற்போது ஸ்டாலின்-வைகோ கூட்டணி மண்ணை கவ்வும். தி.மு.க., காங்கிரஸ் என்றாலே ஊழல் தான். இந்து மதத்தை அவதூறாக பேசும் ஸ்டாலினின் குடும்பத்தினர் கோவில்களுக்கு சென்று வழிபடுகிறார்கள். அவர்களுக்கு ஒரு சட்டம், மற்றவர்களுக்கு வேறு மாதிரியா? இந்த தேர்தலுக்கு பிறகு அ.ம.மு.க. காணாமல் போய்விடும். மத்திய அரசு மீதும், மாநில அரசு மீதும் மக்களிடம் எந்த வெறுப்பும் இல்லை.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமான படையின் அதிரடி தாக்குதலை கண்டு இந்திய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிரதமர் மோடியின் துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது இதனை அனைவரும் வரவேற்றுள்ளனர். எனவே வருகிற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்கு பெரிய வெற்றி கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தலைமை கழகம் சார்பில் அகில உலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் தமிழ்மகன் உசேன், ஒன்றிய செயலாளர் அசோக்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சேதுபாலசிங்கம், முன்னாள் நகர்மன்ற தலைவர் ராமமூர்த்தி, முன்னாள் ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பாசறை செயலாளர் பால்பாண்டியன், நகர துணை செயலாளர் செல்வராணி ரத்தினம், முன்னாள் கவுன்சிலர்கள் ஆரிபுராஜா, வீரபாண்டியன், மண்டபம் நகர செயலாளர் சீமான் மரைக்காயர், ராமசேது உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொருளாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.


Next Story