ராகுல்காந்தியிடம் பட்டியல் ஒப்படைப்பு: புதுவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார்? நாளை அறிவிப்பு வெளியாகிறது


ராகுல்காந்தியிடம் பட்டியல் ஒப்படைப்பு: புதுவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார்? நாளை அறிவிப்பு வெளியாகிறது
x
தினத்தந்தி 18 March 2019 11:00 PM GMT (Updated: 18 March 2019 10:11 PM GMT)

புதுவை எம்.பி. தொகுதி வேட்பாளர் பட்டியல் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதுவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நாளை(புதன்கிழமை) அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது. இதற்கிடையே சபாநாயகர் வைத்திலிங்கம் இன்று டெல்லி செல்கிறார்.

புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் புதுவை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த தொகுதியில் போட்டியிட சபாநாயகர் வைத்திலிங்கம் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே தற்போது ஒரு பதவியில் இருப்பவர்கள் இந்த தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கட்சியின் தலைமை அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம், முன்னாள் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது.

கட்சி வேட்பாளரை இறுதி செய்ய கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும், புதுவை மாநில பொறுப்பாளருமான சஞ்சய்தத் புதுவை வந்து முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் சபாநாயகர் வைத்திலிங்கத்தை அவரது வீட்டில் சென்று சந்தித்து பேசினார். பின்னர் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார்.

அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. முடிவில் சபாநாயகர் வைத்திலிங்கத்தை தேர்தலில் நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான பட்டியல் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வைத்திலிங்கத்தை போட்டியிட செய்வது என முடிவு செய்து இருப்பதால் கட்சி தலைமை அதனை ஏற்றுக்கொள்ளும் என தெரிகிறது.


இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் கட்சியின் தேர்தல் உயர்மட்ட குழு கூட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) புதுடெல்லியில் நடக்கிறது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இதற்கிடையே கட்சியின் தலைமை சபாநாயகர் வைத்திலிங்கத்தை டெல்லிக்கு வரும் படி அழைப்பு விடுத்துள்ளது. எனவே அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை டெல்லி புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அதிகார பூர்வமாக நாளை(புதன்கிழமை) அறிவிக்கப்பட உள்ளது. வேட்பாளர் பட்டியல் வெளியான உடன் வைத்திலிங்கம் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தல் களத்தில் உடனடியாக இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story