ராமநாதபுரம் கடல் பகுதியில் குளச்சல் மீனவர்கள் மீது தாக்குதல் விசைப்படகு சேதம்


ராமநாதபுரம் கடல் பகுதியில் குளச்சல் மீனவர்கள் மீது தாக்குதல் விசைப்படகு சேதம்
x
தினத்தந்தி 19 March 2019 11:00 PM GMT (Updated: 19 March 2019 8:52 PM GMT)

ராமநாதபுரம் கடல் பகுதியில் குளச்சல் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் அவர்களது படகு சேதமானது.

குளச்சல்,

குளச்சல் லியோன்நகரை சேந்தவர் ஆன்டனி (வயது 43). சொந்தமாக விசைப்படகு வைத்து மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த 13 மீனவர்களும் சேர்ந்து கடந்த 15-ந் தேதி குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றார்.

இவர்கள் நேற்று முன்தினம் ராமநாதபுரம் கடல் பகுதியில் கீழ்கரை ஏர்வாடி அருகில் சுமார் 25 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சைல்டு ஜீசஸ் பெயர் கொண்ட விசைப்படகில் இருந்தவர்கள், குளச்சல் மீனவர்களிடம், ‘ நீங்கள் இங்கு மீன்பிடிக்கக்கூடாது’ எனக் கூறி தகராறு செய்தனர்.

அத்துடன், வலையில் கட்டப்படும் இரும்பு குண்டுகளை குளச்சல் மீனவர்கள் மீது சராமரியாக வீசி தாக்கத்தொடங்கினர். அத்துடன், தங்களது படகை குளச்சல் மீனவர்கள் படகின் மீது வேகமாக மோதவிட்டு சேதப்படுத்தினர். இதில் குளச்சல் மீனவர்களின் வலை, உபகரணங்கள் கடலில் மூழ்கியதுடன் படகும் பெரும் சேதமடைந்தது. இதனையடுத்து அவர்கள் அவசரமாக கரையை நோக்கி புறப்பட்டு நேற்று குளச்சல் மீன்பிடித்துறைமுகம் வந்து சேர்ந்தனர்.

இதுகுறித்து ஆன்றனி, குளச்சல் மீன்பிடி உதவி இயக்குனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இந்த சம்பவம் குளச்சல் மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story