ஊடக கண்காணிப்பு மையத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆய்வு


ஊடக கண்காணிப்பு மையத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆய்வு
x
தினத்தந்தி 20 March 2019 10:45 PM GMT (Updated: 20 March 2019 8:51 PM GMT)

ஊடக கண்காணிப்பு மையத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.

நாமக்கல்,

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளதை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, 24 மணிநேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் செயற்கைகோள் தொலைகாட்சிகள் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை கண்காணிக்க ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் தனியாக கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த குழுவினர் பிரசார செய்திகள், வேட்பாளர்கள் குறித்து வெளியிடப்படும் கருத்துகள் போன்றவற்றை கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை தேர்தல் செலவின பார்வையாளர்கள் மயூர் காம்ளே, ராஜேஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதேபோல் வாக்காளர் தகவல் வழங்கும் சேவை மையத்தையும் பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின் போது கலெக்டர் ஆசியா மரியம், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) மலர்விழி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story