திருப்பூரில் 2 பேரை வெட்டி பணத்தை கொள்ளையடித்து சென்ற ரவுடி கைது


திருப்பூரில் 2 பேரை வெட்டி பணத்தை கொள்ளையடித்து சென்ற ரவுடி கைது
x
தினத்தந்தி 20 March 2019 11:30 PM GMT (Updated: 20 March 2019 9:45 PM GMT)

திருப்பூரில் 2 பேரை அரிவாளால் வெட்டி பணத்தை கொள்ளையடித்து சென்ற பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. அதை ஒட்டி தனபால் என்பவருக்கு சொந்தமான பாரும் உள்ளது. டாஸ்மாக் கடையில் நளேந்திரன் (வயது 50) என்பவர் விற்பனையாளராகவும், பாரில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்த வேலங்குடி கிராமத்தை சேர்ந்த கண்ணப்பன் (37) என்பவர் காசாளராகவும் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 16–ந்தேதி அதிகாலை 3 பேர் கொண்ட கும்பல் ஒரு காரில், கையில் அரிவாளுடன் டாஸ்மாக் கடை மற்றும் பாருக்கு சென்றது. பின்னர் உள்ளே சென்ற 3 பேரும் டாஸ்மாக் கடை மற்றும் பாரில் உள்ள பணத்தை கொடுக்குமாறு நளேந்திரன், கண்ணப்பன் ஆகியோரிடம் அரிவாளை காட்டி மிரட்டி உள்ளனர். ஆனால் அவர்கள் பணம் இல்லை என்று கூறியதால், ஆத்திரமடைந்த அந்த கும்பல் நளேந்திரன் மற்றும் கண்ணப்பனை அரிவாளால் வெட்டியது. மேலும் கண்ணப்பனிடம் இருந்த ரூ.2 ஆயிரம், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்றது. இதில் படுகாயமடைந்த கண்ணப்பன், நளேந்திரனை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திருப்பூர் காலேஜ் ரோட்டில் திருமுருகன்பூண்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர்.

இதில் அவர் ஊத்தங்கரையை அடுத்த பெரிய தள்ளப்பாடி பகுதியை சேர்ந்த கதிர் (27) என்பதும், தற்போது திருப்பூர் சாமுண்டிபுரம் முதல் வீதியில் தங்கி இருப்பதும் தெரிய வந்தது. மேலும் வஞ்சிபாளையம் அருகே டாஸ்மாக் கடை மற்றும் பாரில் 2 பேரை அரிவாளால் வெட்டி விட்டு, பணத்தை கொள்ளையடித்து சென்றவர் இவர்தான் என்பது தெரிய வந்தது. இதையடுத்து கதிரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற 2 பேர் தலைமறைவாகி விட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட கதிர் மீது புதுச்சேரியில் கொலை வழக்கும், இளையாங்குடி, காளையார்கோவில் போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகளும், திருப்பூர் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, வழிப்பறி உள்பட 8–க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும், பிரபல ரவுடி என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.


Next Story