மாவட்டத்தில் நாளை எடப்பாடி பழனிசாமி- மு.க.ஸ்டாலின் ஒரே நேரத்தில் தேர்தல் பிரசாரம்: அ.தி.மு.க.-தி.மு.க.வினர் உற்சாகம்


மாவட்டத்தில் நாளை எடப்பாடி பழனிசாமி- மு.க.ஸ்டாலின் ஒரே நேரத்தில் தேர்தல் பிரசாரம்: அ.தி.மு.க.-தி.மு.க.வினர் உற்சாகம்
x
தினத்தந்தி 20 March 2019 11:15 PM GMT (Updated: 20 March 2019 10:41 PM GMT)

சேலம் மாவட்டத்தில் நாளை (வெள்ளிக் கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒரே நேரத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள். இதனால் அ.தி.மு.க., தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சேலம்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெறுகிறது. அ.தி.மு.க. கூட்டணிக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் இடையே கடும் பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலான கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

அதாவது, ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருமந்துறையில் உள்ள விநாயகர் கோவிலில் காலை 9 மணிக்கு சாமி தரிசனம் செய்துவிட்டு தனது தேர்தல் பிரசாரத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்குகிறார். இதையடுத்து அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளரான கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே. சுதீசை ஆதரித்து ஆத்தூர் அருகே உள்ள புத்திர கவுண்டம்பாளையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். பின்னர் அவர் வாழப்பாடியிலும், அயோத்தியாப்பட்டணத்திலும் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சேலத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். சேலம் கோட்டை மைதானத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

இதனால் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் நாளை ஒரே நேரத்தில் அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினும் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதால் அந்த இரு கட்சிகளின் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


Next Story