திருமண மண்டபங்களை வாடகைக்கு விடும்போது தகவல் தெரிவிக்க வேண்டும் மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்


திருமண மண்டபங்களை வாடகைக்கு விடும்போது தகவல் தெரிவிக்க வேண்டும் மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 21 March 2019 10:45 PM GMT (Updated: 21 March 2019 7:32 PM GMT)

திருமண மண்டபங்களை வாடகைக்கு விடும்போது, அந்த விவரம் குறித்து உரிமையாளர்கள் தாசில்தார்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தா கூறினார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறை படுத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்களில் அரசியல் கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்களோ காதுகுத்து, வளைகாப்பு, கோவில் பூஜை, அன்னதானம் மற்றும் பிறந்தநாள் விழாக்கள் என்ற பெயரில் வாடகைக்கு எடுத்து, வாக்காளர்களுக்கு போலியாக விருந்து வைத்தல், பரிசு கொடுத்தல் போன்றவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டு உள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காலங்களில் நடத்தை விதிமீறல்கள் நடைபெறாமல் கண்காணிக்க ஏதுவாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருமண மண்டப உரிமையாளர்கள், தங்களது மண்டபங்களை வாடகைக்கு விடும்போது, அதன் விபரத்தை சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், திருமண மண்டபங்களை முன்பதிவு செய்ய வரும் நபர்களிடம், திருமண பத்திரிகை நகல் உள்ளிட்ட ஆதாரங்களை கேட்டுப்பெற்று உரிய பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும்.

போலியான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டால் அது தொடர்பான விபரங்களை சம்பந்தப்பட்ட தாசில்தார்களிடம் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு இரு தினங்களுக்கு முன்னதாக வாக்குப்பதிவு முடியும் வரை வெளியூர் ஆட்களை மண்டபங்களில் தங்க வைக்க அனுமதிக்கக் கூடாது. இதேபோல் தங்கும் விடுதி நடத்திவரும் உரிமையாளர்கள், தேர்தல் காலங்களில் அறைகளை எடுத்து தங்கி வரும் நபர்கள் பற்றிய விபரங்களை தனியாக பதிவேட்டில் பதிவு செய்து வருவதுடன், தேர்தல் வாக்குபதிவு நடக்கும் இரு தினங்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட தொகுதியை தவிர பிற வெளியூர் நபர்கள் எவரேனும் அறைகளை எடுத்து தங்க அனுமதிக்கக்கூடாது. மேலும், நகை அடகு பிடிப்போர் மூலமாக வாக்காளர்களுக்கு கையூட்டு வழங்கப்படுகிறதா? என்பது தேர்தல் அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. நகை அடகு பிடிப்போர் அரசியல் கட்சி அல்லது வேட்பாளர்களின் தூண்டுதலின் பேரில் அவ்வாறான செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், தேர்தல் நடத்தை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் விதிகளுக்கு புறம்பாக நடைபெறும் நடவடிக்கைகளை பொது மக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கண்காணித்து சம்பந்தப்பட்ட தாசில்தார்களிடமோ அல்லது பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 18004252240-ஐ தொடர்பு கொண்டோ புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 

Next Story