பா.ஜனதா, அ.தி.மு.க. அரசுகளை அகற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களியுங்கள் கனிமொழி எம்.பி. பேச்சு


பா.ஜனதா, அ.தி.மு.க. அரசுகளை அகற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களியுங்கள் கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 21 March 2019 11:00 PM GMT (Updated: 21 March 2019 7:43 PM GMT)

பா.ஜனதா, அ.தி.மு.க. அரசுகளை அகற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

உடன்குடி,

உடன்குடி அருகே தண்டுபத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

நமது நாட்டில் பா.ஜனதாவின் ஆட்சியில் சிறுபான்மையினர் நிம்மதியாக வாழ முடியவில்லை. ஆண்களுக்கு நிகராக பெண்கள் வாழ முடியவில்லை. யாருக்குமே பாதுகாப்பற்ற நிலை உள்ளது. மறுபடியும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், இனிமேல் இந்தியாவில் தேர்தலையே யாரும் பார்க்க முடியாத நிலை ஏற்படும். இந்த தேர்தல்தான் நாட்டின் கடைசி தேர்தலாக அமைந்து விடும். அதற்கு பிறகு மாற்று கட்சிகளையும், கருத்துகளையும் அழித்து விடுவார்கள். பா.ஜனதா ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்காக யாரையும் காவு கொடுக்க தயங்காதவர்கள்.

வட மாநிலங்களில் தேர்தல் நடந்தபோது, மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே பா.ஜனதா அரசு உயர் பணமதிப்பு இழப்பு செய்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் வெள்ளம் வந்தபோதும், வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டபோதும் ஆறுதல் கூற வராத பிரதமர் நரேந்திரமோடி, தற்போது இங்கு குறைந்தபட்ச வாக்குகளாவது கிடைக்காதா? என்ற ஆசையில் அடிக்கடி ஓடோடி வருகிறார். ஆனால் அவர், புதுடெல்லியில் சென்று போராடிய தமிழக விவசாயிகளை சந்திப்பதற்கு கூட விரும்பவில்லை.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக யாரும் போராடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு காரணமானவர்கள் அனைவரும் பதில் சொல்லியே தீர வேண்டும்.

பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கணக்கான பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக இல்லாமல், குற்றவாளிகளை காப்பதற்கு தமிழக அரசு முயற்சி செய்கிறது. இதுதொடர்பாக மேலும் யாரும் புகார் தெரிவித்து விடக்கூடாது என்பதற்காக, புகார் தெரிவித்த பெண்ணின் பெயரை அரசே வெளியிடுகிறது. மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியதாக கூறிய பின்னரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை என்ற பெயரில், பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

மறுபடியும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், அ.தி.மு.க.வை கபளிகரம் செய்து விடும். அதைப்பற்றி அ.தி.மு.க.வினருக்கு கவலை இல்லை. அவர்கள் தமிழக மக்களின் உரிமைகள், நலன்களை தாரைவார்த்து கொடுக்க தயங்காதவர்கள். எனவே தமிழர்களுக்கு துரோகம் விளைவிக்கும் பா.ஜனதா அரசையும், அ.தி.மு.க. அரசையும் அகற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களியுங்கள். இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், ஒன்றிய செயலாளர்கள் பாலசிங் (உடன்குடி), செங்குழி ரமேஷ் (திருச்செந்தூர்), தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story