7 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது


7 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 April 2019 10:30 PM GMT (Updated: 4 April 2019 11:29 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் அதிரடி சோதனையிட்டபோது இருவேறு இடங்களில் 7 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்,

போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு அனீவிஜயா உத்தரவின்பேரில் கடந்த 3 நாட்களாக போதைப்பொருள் விற்பனையை தடுத்து கடத்தல்காரர்களை கைதுசெய்ய ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன்படி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு, சப்-இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி உள்ளிட்டோரை கொண்ட தனிப்படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ராமநாதபுரம் சக்கரக்கோட்டை சுடுகாடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த வாலிபர் சீருடை அணியாத போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். இதனை தொடர்ந்து அவரை மடக்கி பிடித்து சோதனையிட்டு விசாரித்தபோது ராமநாதபுரம் அருகே உள்ள நத்தகுளத்தை சேர்ந்த சிவநாதன் மகன் பிரபாகரன்(வயது 37) என்பது தெரிந்தது. அவர் வைத்திருந்த பையில் சோதனையிட்டபோது 5 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்து அவரை கைதுசெய்தனர்.

இதேபோல, பரமக்குடி சந்தை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த கமுதி மேட்டுத்தெருவை சேர்ந்த குருசாமி மகன் முனியசாமி என்ற சேகர்(68) என்பவரை பிடித்து சோதனையிட்டனர். அவர் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா இருந்தை கண்டு அதனை பறிமுதல் செய்ததோடு சேகரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். 

Next Story