அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போலீஸ் அதிகாரி மகன் குத்திக்கொலை எலக்ட்ரீசியன் கைது


அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போலீஸ் அதிகாரி மகன் குத்திக்கொலை எலக்ட்ரீசியன் கைது
x
தினத்தந்தி 10 April 2019 11:45 PM GMT (Updated: 10 April 2019 6:58 PM GMT)

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மகனை குத்தி கொலை செய்த எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கை நேரு பஜாரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர். இவருடைய மகன் தமிழ்செல்வன் (வயது 40). இவர் நேற்று காலை 11 மணிக்கு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு மாடியில் நோயாளிகளுக்கு மருந்துகள் கொடுக்கும் அறையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒக்கூரை சேர்ந்த அருண்குமார் (23) என்பவர், தமிழ்செல்வனுடன் தகராறு செய்தாராம். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே தமிழ்செல்வன் இறந்தார்.

இந்த சம்பவத்தை பார்த்த அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். தமிழ்செல்வன் இறந்ததை தொடர்ந்து அருண்குமார் அவருடைய உடல் கிடந்த இடத்தின் அருகில் கத்தியுடன் சென்று உட்கார்ந்து விட்டார். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன், சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் அழகர் ஆகியோர் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து போலீசார் அருண்குமாரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அதில் கொலை செய்யப்பட்ட தமிழ்செல்வன், அருண்குமார் தாயாருடன் நெருங்கி பழகி வந்தாராம். இதை அறிந்த அருண்குமார் இருவரையும் கண்டித்துள்ளார்.

சம்பவத்தன்று தாயார் வீட்டில் இல்லாததால், அவரை தேடி அருண்குமார் சிவகங்கைக்கு வந்தார். அங்கு விசாரித்த போது, தமிழ்செல்வன் தனது வேலை விசயமாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 2 மாடியில் உள்ள மருந்தாளுனர் அறையில் இருப்பது தெரிந்து அங்கு சென்றார்.

அங்கு தனது தாயார் குறித்து விசாரித்த போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த அருண்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தமிழ்செல்வனை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு, அங்கேயே உட்கார்ந்ததிருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அருண்குமாரை கைது செய்தனர். பட்டதாரியான அருண்குமார் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.

Next Story