கரூரில் வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்


கரூரில் வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 21 April 2019 10:45 PM GMT (Updated: 21 April 2019 8:40 PM GMT)

கரூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் கூறினார்.

கரூர்,

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18-ந்தேதி நடந்தது. இதையடுத்து கரூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் இருந்து உரிய பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை, வாக்கு எண்ணும் மையமான கரூர் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது. சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட 6 அறைகளுக்கு, பாதுகாப்பு கருதி சீல் வைக்கப்பட்டது.

முதல் அடுக்கில் மத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் (பி.எஸ்.எப்.) 23 பேர் துப்பாக்கி ஏந்தியபடி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 6 அறைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். 2-ம் அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை வீரர்கள் 1 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 40 போலீஸ்காரர்களுடன் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். 3-ம் அடுக்கில் கரூர் மாவட்ட ஆயுதப்படை போலீசார் மற்றும் தாலுகா போலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் 178 பேர் உள்பட மொத்தம் 243 பேர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சுழற்சி முறையில் 2 குழுவினராக பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

கரூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாரதி மேற்பார்வையில் ஒவ்வொரு சுழற்சி முறை பணிக்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு நிலையில் உள்ள போலீஸ் அதிகாரி இதனை கண்காணிக்கிறார். மேலும் கூடுதல் பாதுகாப்பினையொட்டி ஒரு வஜ்ரா அதிரடிப்படை வாகனமும், ஒரு அதிவிரைவுப்படை வாகனமும் அங்கு தயார் நிலையில் உள்ளன. வாக்கு எண்ணும் கட்டிட மேற்கூரையின் மீதும் பாதுகாப்புக்காக போலீசார் உள்ளனர். மேலும் நிபுணர்கள் உதவியுடன் வெடிகுண்டு சோதனை தளவாடங்களும் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

Next Story